Thursday 17 April 2014

திருப்பாணாழ்வார்

பாணர் என்ற இசை மரபு குலத்தில் பிறந்தவர் திருப்பாணர். திருவரங்கத்தைச் சேர்ந்த இவர், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர். மிகுந்த பக்திமானாக இருந்தும் அவருக்குக் கோயிலுக்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் காவிரிக் கரையில் இருந்தே தனது பக்தியை வீணை வாசிப்பாக வெளிப்படுத்துவார். அரங்கனை எண்ணி இசை மழை பொழிவார்.
இப்படியாக ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு தன்னை மறந்து வீணையை இசைத்துக்கொண்டு இருந்தார் திருப்பாணர். அப்போது பெருமாள் திருமஞ்சனத்திற்காக வழக்கம்போல் காவிரியில் தண்ணீர் எடுக்க வந்தார் லோகசாரங்க முனிவர். அந்த வழியில்தான் அமர்ந்து இருந்தார் திருப்பாணர். மெய்மறந்த நிலையில் இறைவனுக்காக வீணை இசைத்துக்கொண்டிருந்ததால், அவரது காதில் லோகசாரங்கர் விலகச் சொல்லிக் கூறியது எதுவும் காதில் விழவில்லை.
கோபம் கொண்ட லோகசாரங்கர் ஒரு கல்லினை எடுத்து பாணர் மீது வீச, அது அவரது முகத்தில் பட்டு ரத்தம் கொட்டியது. அபசாரம் இழைத்துவிட்டதாகப் பதறிய திருப்பாணர் விலகி வழிவிட்டார். பிறகு லோகசாரங்கர் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்றார். கோயிலுக்குச் சென்று ஸ்ரீரங்கனைப் பார்த்தால், அந்த தெய்வத் திருமுகத்தில் ரத்தம் வழிந்தது. அதனைக் கண்ட ஸ்ரீரங்க நாச்சியார் திருப்பாணரைத் திருக்கோயிலின் உள்ளே அழைக்க வழி ஏற்ப்படுத்துமாறு கேட்டுக்கொண்டாராம்.
பெருமாளின் இந்த நிலை லோகசாரங்க முனிவரின் மனத்தை வருத்தியது. இரவெல்லாம் உறங்காமல் உழன்றுகொண்டிருந்தார். அசதியால் தூங்கியபோது, கனவில் பெருமாள் தோன்றினாராம். தனக்குப் பிரியமான பக்தனான திருப்பாணரை, லோகசாரங்கர் தன் தோள்களில் தூக்கிக்கொண்டு ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலுக்குள் வருமாறு அரங்கன் ஆணையிட்டார்.
அவ்வாறே மறுநாள் லோகசாரங்கரும் தன் தோள்களில் திருப்பாணரைத் தூக்கிச் சென்று, இறைவன் சன்னிதானத்தில் இறக்கிவிட்டார். அங்கே அரங்கனை முதன் முதலாகப் பாதாதி கேசம் - திருவடி முதல் திருமுடி வரை - கண்ட திருப்பாணர் ஆனந்த அனுபவம் பெற்றார். அந்த அனுபவம் அமலாதிபிரான் என்ற பத்து திவ்ய பிரபந்தங்களைக் கொண்ட தொகுப்புப் பாசுரமாக வெளிவந்தது.
அவ்வாறே மறுநாள் லோகசாரங்கரும் தன் தோள்களில் திருப்பாணரைத் தூக்கிச் சென்று, இறைவன் சன்னிதானத்தில் இறக்கிவிட்டார். அங்கே அரங்கனை முதன் முதலாகப் பாதாதி கேசம் - திருவடி முதல் திருமுடி வரை - கண்ட திருப்பாணர் ஆனந்த அனுபவம் பெற்றார். அந்த அனுபவம் அமலாதிபிரான் என்ற பத்து திவ்ய பிரபந்தங்களைக் கொண்ட தொகுப்புப் பாசுரமாக வெளிவந்தது.
இவர் திருப்பாணாழ்வாராகக் கொண்டாடப்படுகிறார். இவர் பெருமாளின் ஸ்ரீவத்ஸம் என்னும் மருவின் அம்சமாகப் பிறந்தவர் என்பர்.
அரங்கனின் திருவாயின் அழகைக் கண்டு சிந்தை இழந்தேன் என்று பாசுரத்தில் சொல்கிறார் திருப்பாணாழ்வார். பின்னர் கருவறையில் பெரிய பெருமாளைக் கண்ட பின் தம் கண்கள் மற்றொன்றினைக் காணா என்று கூறியபடி பெருமாளுடன் ஐக்கியமானார் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment