Skip to main content

அரங்கன் - அற்புதசேர்த்திஉற்சவம்

 Thank to Murali Bhattar
திருவரங்கத்தில்இன்று (30.04.2012) நடைபெற்றஆரவாரமில்லாதஒருஅற்புதசேர்த்திஉற்சவம்
(ஸ்ரீரங்கம்முரளீபட்டர்)
அரங்கனோடு அற்புதமாக கலந்தவர்கள் தாயார் ரங்கநாயகி, காவிரி, கமலவல்லி , சேரகுலவல்லி, ஆண்டாள், துலுக்கநாச்சியார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.
இதில் அரங்கன் திருவரங்கத்திற்கு வரும் முன்னமேயே ரங்கநாயகித் தாயார் எழுந்தருளி அரங்கன் அமர்ந்தபின் வெளிப்பட்டவள். காவிரியும் அரங்கன் வருவதற்கு முன்னமேயே அவனுக்கு தன்னையே ஒரு மாலைப்போல் இட்டு ஒரு மணல்திட்டை ஏற்படுத்தியவள். இவர்களைத் தவிர ஏனையோர் அரங்கன் எழுந்தருளியபிறகு கலந்தவர்கள்.
இராமன் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் . இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான ‘புனர்வசு’ அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது. இராமயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்திருக்கின்றார். சில கட்டங்களில் கொதித்தெழுந்து தன் சேனைகளுடன் இராவணனுடன் யுத்தம் செய்ய, காலக்ஷேபத்தில் மெய்மறந்து, புறப்பட்டிருக்கின்றார். இத்தனைக்கும் இவருக்கு ‘திடவ்ரதன்’ என்று பெயர்.. மாமன்னன்..! சோழ, பாண்டிய அரசுகள் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.
‘இராம” என்னும் நாமம் இவரை மெய்மறக்க செய்திருக்கின்றது. அனைத்தையும் மறந்து, அவன் ஒருவனை மட்டுமே சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள். இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள். இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்றே அழைக்கப்படுகின்றது. இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும்! மற்ற ஆழ்வார்க்கு இல்லாத ‘பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப்பெருமான்! இவர் பாட ஆரம்பித்த முதல் பாடலே அரங்கனை முன்நிறுத்திதான்.
”இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த – அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும் அணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவி – திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் – கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணினைகள் என்று கொலோகளிக்கும் நாளே?”
(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?) என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம். இந்த தாபமிருந்தால் போதும் – அவன் செயல்பட தொடங்கிடுவான்.
ராஜா குலசேகரருக்கு அரங்கனோடும் அவன்தம் அடியாரோடும் என்று பித்தாகி பிணைந்து நிற்போம் என்று மிக ஆசை. வைணவ குழாமோடு கூத்தாட ஆசை. அரச பொறுப்பு குறுக்கே நின்றது. அமைச்சர்களின் ஒரு சூழ்ச்சி, குலசேகர மன்னனின் அரசப் பற்றை அறுத்தது. அரங்கன் பற்று மிகுந்தது.
இதில் அமைச்சரின் சூழ்ச்சியெல்லாம் அரங்கனின் சித்தமே. இவர் அரங்கனுக்காக ஏங்கினார். . அவன் அதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தி அவராக எல்லாம் துறக்கும்படியாக செய்து அவனருகே இழுத்துக்கொண்டார். இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அரங்கனுக்கு நிகர் அரங்கனே..!
ஆழ்வாராதிகள் தொடங்கி பூர்வாச்சாரியர்கள் ஏன் இன்று வரை யாரை எப்படியெப்படி இழுத்துக் கொள்ள வேண்டுமோ அவர்களை அவர்களாகவே வரும்படி செய்வான் இந்த மாயவன்! யாராவது ”தான்தான்” ; என்று அகங்காரம் கொண்டால் அவர்களாகவே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்ளும்படியும் செய்வான்!.
அரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை. யாரை எண்ணி எண்ணி அவரும் அவரது மகளான குலசேகரவல்லியும் ஏங்கினார்களோ அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறுப்பெற்றார். அரங்கன் மனமுவந்து ஏற்ற அடியாள் இந்த குலசேகரவல்லி!. இந்த அரங்கனின் அடியாள் ஆண்டாளுக்கு முன்னோடி!. ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தான் அரங்கன்.! இன்றும் கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி! அரையர்கள் பெருமாள் திருமொழி ஸேவிக்க ஜனங்கள் மத்தியில் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏகஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள் இருவரும்! அதிகம் ஆரவாரமில்லாத இந்த அற்புத சேர்த்தி உற்சவம் அர்ச்சுனன் மண்டபத்தில் இன்று 30.04.2012 நடைபெற்றது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் இந்த சேரகுலவல்லிக்கு பொன்னாலானத் திருமேனியே செய்து வைத்தான். இந்த விக்ரஹம் மிலேச்சர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் கோவிலார்கள் பஞ்சலோகத்தில் செய்துள்ளார்கள். குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!. இவரால் இயற்றப்பட்டதுதான் ‘முகுந்த மாலை” என்னும் அற்புத ஸமஸ்கிருத துதி!.
பல்லாண்டு பாடும் பாகவதர்கள் கூட்டத்தில் பாடுவதையும், ஆடுவதையும், அவர்களோடு மன்னன் என்ற பற்று அறுத்து பாகவதன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றார் குலசேகரப் பெருமான்..!

Comments

Popular posts from this blog

Applications Open for Nithyapadi Thiruvarathanam Sponsors 🙏

🔹 Just one month of seva – once a year Daily two-time Aradhanam will be performed in all 6 sanctums of Sri Kannapiran Temple. 🔆 *Regular Weekly Services*   _Fridays – Thayar Tirumanjanam (Abhishekam)_   _Saturdays – Anjaneyar Tirumanjanam & Evening Thiruppavai Goshti_  🌟 *Monthly Star Abhishekams*   _Rohini – Rajagopala Swami_   _Uthiram – Mahalakshmi_   _Thiruvonam – Lakshmi Hayagreevar_   _Moolam – Anjaneyar_   _Sankatahara Chaturthi – Vijaya Ganapathi Tirumanjanam_  🙏 *Special Blessings for Sponsors*  ✔ *_Archana & Sankalpam in your name during every Tirumanjanam_* ✔ *Temple Prasadam will be sent during the annual Uriyadi festival & Homams*  👉 One month of offering… brings divine grace throughout the year! 📿 *Those who uphold Kannapiran*… *Kannapiran will uphold their family for a lifetime*. 📌 *For more details, contact*: 📞 9500264545 / 9942604383 / 8056901601 📌 ...

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...