Wednesday 24 September 2014

ஸ்ரீரங்கம் தாயார் நவராத்திரி திருநாள் வைபவம்....


நன்றி : மாலு ஸ்ரீரங்கம்
1. நவராத்ரி முதல்நாள் வேதவிண்ணப்பம்: ஸ்ரீரங்கநாய்ச்சியார் நித்தியப்படிபோல காலையில் திருவாராதனமாகி பொங்கல் அமுதுசெய்ததும், வேதவ்யாஸ பட்டர் எழுந்தருளி வேதவிண்ணப்பம் நடைபெறும்.
2. நவராத்திரி முதல் திருநாளன்று ஸ்ரீரங்கநாய்ச்சியார் ஸந்நிதியிலும் வேதம் தொடங்கும் முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
3. ஸ்ரீரங்கநாய்ச்சியார் பொங்கல் அமுது செய்ததும் வேதவ்யாஸ பட்டரைத் திருமாளிகையிலிருந்து
எழுந்தருளப் பண்ணி வருவர்.
4. அவர் கொலு மண்டபம் வந்து அங்கே எழுந்தருளியிருப்பார்.
5. ஸ்தானீகர் உள்ளே யிருந்தவாறே வேதவ்யாஸ பட்டருக்கு அருளப்பாடிட்டதும், வேதவ்யாஸ பட்டர் உள்ளே வந்து ஸ்தாநீகரிடம் தேங்காயைக் கொடுத்துவிட்டு, தண்டன் ஸமர்ப்பித்து கர்பக்ருஹத்துக்குள் சென்று எழுந்தருளி “இஷே த்வோர்ஜே த்வா” என்ற யஜுர்வேதம் முதல் பஞ்சாதியைச் சொல்வார்.
6. ஸ்தாநீகர் வேதவ்யாஸ பட்டருக்குத் தீர்த்தம், சந்தனம் ஸாதித்ததும், நாய்ச்சியார் ஸந்நிதி பண்டாரி, பட்டருக்குத் தொங்கு பரியட்டம் கட்டி, ஸ்ரீரங்கநாய்ச்சியார் சாற்றிக் கொண்டிருக்கும் மாலையைக் களைந்து ஸாதித்து ஸ்ரீசடகோபமும் ஸாதிப்பார்.
7. பிறகு ருக், யுஜுஸ், ஸாம, சந்தஸ்ஸாம, அதர்வண முதலான வேதங்களுக்கும் தனித் தனியாய் அருளப்பாடாகும்.
8. அந்தந்த வேதங்களுக்கு பாத்தியப்பட்டவர்கள் வந்து ஸ்தாநீகரிடம் தேங்காய் கொடுத்து, தண்டம் ஸமர்ப்பித்து கர்பக்ருஹத்துக்கு வெளியிலிருந்தபடியே தத்தமக்கு
உரித்தான வேதத்தைச் சொல்லி, தீர்த்தம், சந்தனம்
மட்டும் பெற்றுக்கொண்டு போவார்கள்.
9. பிறகு ரக்ஷாபந்தனம். நாச்சியாரை அமுது பாறைக்கும் கர்ப்க்ருஹத்வாரத்துக்கும் மத்தியில் எழுந் தருளப்பண்ணி, அமுது பாறையில் கலசம் ஸ்தாபித்து, நாய்ச்சியாருக்குத் திருமஞ்சனம் நடக்கும்.
10. திருமஞ்சனமானதும், நாய்ச்சியார் உள்ளே
எழுந்தருளுவார். திருவாராதனம் ஆகி பெரிய அவசரமும் அமுது செய்தருள்வார்.
11. உடனே யாகசாலையில் ஹோமம் நடந்து
உத்ஸவத்துக்காக ரக்ஷாபந்தனம் செய்யப்படும்.
12. அப்பொழுது குதிரை வாஹனம் வடதிருக்காவேரியில் தீர்த்தமாடி நாய்ச்சியார் ஸந்நிதி வந்து கொலு மண்டபத்தில் நாய்ச்சியாருக்கெதிரே எழுந்தருளப் பண்ணப்படும்.
13. முதலில் நாய்ச்சியாருக்குத் திருவாராதனமும் ரக்ஷாபந்தனமும் ஆனபிறகு, குதிரைக்குத் திருவாராதனமும் ரக்ஷாபந்தனமும் நடைபெறும்.
14. மொச்சைச் சுண்டலும் பிரஸாதமும் நிவேதனமாகும்.
15. நாய்ச்சியார் கொலு: நாய்ச்சியார் தோளுக்கினியானில் எழுந்தருளி, வலம் வந்து, தென்புறத்தில் அமைந்துள்ள நாலுகால் மண்டபத்தில் திருவடி விளக்கிப் பானகம், வடைபருப்பு (விடாய் பருப்பு) அமுது செய்தருள்வார்.
16. ஸ்தலத்தார் ஆசார்ய புருஷர்கள் கோஷ்டிக்குத் தீர்த்த விநியோகமானதும் படியேற்றமாகிக் கொலு மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளி மண்டபமெழுந்தருளுவார்.
17. பிறகு, அலங்காரம் அமுது செய்தருள்வார்.
18. ஆர்யபட்டாள் வாசலிலிருந்து (ஸ்ரீரங்கநாய்ச்சியார் ஸந்நிதியின் முகப்பு வாசலுக்கு ஆர்யபட்டாள் வாசல்
என்று பெயர்) கோயில் அதிகாரியை காப்பந்தத்துடன் பிரதக்ஷிணமாய் அழைத்து வர, அவர் நாய்ச்சியாரிடம்
ஸேவை மரியாதை பெற்றுக் கொண்டு மணியகாரரோடு வெளியே போவார்.
19. ஆரியபட்டாள் வாசலுக்கருகில் கம்பத்தோரமாய் மணியகாரரும், வடபுறம் மண்டபத்தில் கோயில்
அதிகாரியும், தேவஸ்தான ஊழியர்களும் அமர்ந்திருப்பார்கள்.
20. நாய்ச்சியாருக்குத் திருவாராதனம் ஆரம்பித்தவுடன்
யானை நொண்டியடித்துக் கொண்டு மௌத்ஆர்கன் இசைத்தும், சாமரம் வீசியும் அதிகாரிகள் இருக்குமிடம் நோக்கிச் செல்லும்.
21. நாதஸ்வரக் கச்சேரி நடைபெறும்; இடைவிடாமல் நிலவரிசையும் மத்தாப்பும் கொளுத்தப்பட்டு
அதிர்வெடியும் வெடிக்கும்.
22. ஒரு மணி நேரத்துக்கு மேலாகவே வெளியில் இந்த வைபவம் நடந்து கொண்டிருக்கையில், நாய்ச்சியாருக்குத் திருவாராதன மாகி, பட்டர் எழுந்தருளி ஆராதனாங்கமான வேதவிண்ணப்பமும் நடைபெறும்.
23. வெளியே நடக்கும் கொலுக் கச்சேரியும் முடிவு பெறும்.
24. நாய்ச்சியாருக்குக் கும்பஹாரத்தியானதும், வெள்ளிச்
சம்பா நிவேதனம், தீர்த்த விநியோகம், பாவாடை போட்டு பிரஸாத விநியோகம் முதலியவை நடந்து திரை ஸமர்ப்பிக்கப்படும்.
25. நாய்ச்சியார் தோளுக்கினியானில் எழுந்தருளிப் புறப்பட்டு, எதிரிலுள்ள யானைப்படிக்கட்டு வழியாய் இறங்கி, அரையர் தாளத்துடன் ஸேவிக்கும் இசையோடு கண்ணாடியறைக்கு எதிரிலுள்ள படிக்கட்டில் படியேற்றம் கண்டருளி உள்ளே எழுந்தருளுவார்.
26. நவராத்ரி முதல் எட்டு திருநாட்களிலும் இதேமாதிரிதான் உத்ஸவம் நடைபெறும்.
26. ஸரஸ்வதி பூஜையன்று வெளியே வாத்தியக் கச்சேரி முதலியவை நடைபெறாது.

No comments:

Post a Comment