Saturday 19 March 2016

திருமண் மகிமை



கண்ணன் என்பவர் ஒரு கிராமவாசி. மூட்டை தூக்கும் தொழிலாளி. காலையில் வேலைக்கு போனால் இரவு நேரமாகி தான் வீட்டுக்கு வருவார். வேலை இருந்தால் தான் கூலி. அதுவும் சொற்ப அளவே! கண்ணன் மனைவி சீதை நரசிம்மபக்தை.அவள், தினமும் நரசிம்மர் ஆலயம் சென்று வணங்கி வருவாள்.நெற்றியில் திருமண் இடுவாள் அவள் தெருவில் நடந்தால் காண்பவர்கள் கையெடுத்து வணங்கி விட்டு போவார்கள்.ஏழைத் தொழிலாளியின் மனைவியானாலும், வறுமையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்.தன் கணவரிடம், ""என்னங்க! நீங்க வேலைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி திருமண் இட்டுட்டு கிளம்புங்களேன், என்பாள்.கண்ணன் கேட்க மாட்டார். ""அடி போடி பைத்தியமே! நீ வேற! மனுஷன் காலையில் மண்டிக்கு போனா தான் மூட்டை இறக்க வாய்ப்பாச்சும் கிடைக்கும்.தாமதமா போனா இருக்கிற ஜீவனமும் போயிடுமே! என்பார்.இதன் பின் அவ்வூருக்கு ஒரு மகான் வந்தார்.அவர் திருமண் அணிவதின் மகிமை பற்றி பேசினார். இதைக் கேட்ட சீதை, கணவனிடம் இன்னும் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.""நீங்க! திருமண் கூட இட வேண்டாம். காலையில், வேலைக்கு போகும் வழியில் திருமண் இட்டு யாராவது ஒருவர் முகத்திலாவது விழிச்சிட்டு போங்க, என்றாள்.கண்ணன் ஒப்புக்கொண்டதுடன் மனைவிக்கு இதுபற்றி சத்தியமும் செய்து கொடுத்தார்.அவ்வூரில் கோவிந்தன் என்ற விவசாயி தினமும் காலையில் நீராடி நெற்றி நிறைய திருமண் அணிந்து அதிகாலையே ஏர் சுமந்து வயலுக்கு செல்வதை கண்ணன் அடிக்கடி பார்த்துள்ளார்.
அவர் வரும்போது, கண்ணன் அவர் முகத்தைப் பார்த்து விட்டு, வேலைக்கு கிளம்புவார்.ஒருநாள் காலையில் கோவிந்தனைக் காணவில்லை. கண்ணன் திண்டாடி விட்டார். தாமதமா போனா வேலை கிடைக்காதே...என்ன செய்றது. ஒருவேளை கோவிந்தன் முன்கூட்டியே வயலுக்கு போயிருப்பாரோ என எண்ணி, வயலுக்கு ஓடினார்.அன்று ஏகாதசி என்பதால் காலையே கோவிந்தன் நரசிம்மர் தரிசனம் முடித்து விட்டு வயலுக்கு போய் ஏரைப் பிடித்தார்.ஏதோ ஒன்று தட்டவே, அவ்விடத்தை தோண்டி உள்ளிருந்து ஒரு இரண்டு புதையல் பாத்திரத்தை எடுக்கவும், கண்ணன் அங்கு போய் சேரவும் சரியாக இருந்தது.
தான் புதையல் எடுத்ததை கண்ணன் கவனித்து விட்டதைக் கண்ட, கோவிந்தன் கண்ணனிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து சமஅளவில் இருவரும் வைத்துக் கொள்ளலாம் என்றார்.கண்ணன் அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை.திருமண் இட்டிருக்கும் உமது நெற்றியை பார்க்கவே வந்தேன்.மேலும் புதையல் அரசாங்கச் சொத்து. இதை மன்னனிடம் கொடுப்போம். அவனாக ஏதும் தந்தால், பிரித்துக் கொள்ளலாம், என்றார். இருவரும் மன்னனிடம் சென்றனர்.அவர்களின் நேர்மையை பாராட்டிய மன்னன், நடந்தது கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் திருமண் இட உத்தரவிட்டான்.அவர்களின் வறுமை நீங்கியது. நல்ல பழக்கங்கள் ஒருவரை வாழ்வில் உயர்த்தும்.நல்லதை செய்தால் மட்டுமல்ல, நல்ல பழக்க வழக்கமுடையவர்களை பார்த்தால் கூட வாழ்வின் நிலை உயர்ந்து விடும்........
"கோவிந்தன் திருவடிகளே சரணம்"

No comments:

Post a Comment