Monday 28 March 2016

ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்

குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடைந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுனனைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறைவேற்ற முடியாமல் தடுக்க ஒரு திட்டம் போட்டார். கிருஷ்ணர் திரௌபதியிடம் “நீ எப்படியாவது பீஷ்மர் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கு செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச்சென்றால் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அறிந்து கொண்டுவிடுவார். என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும்’’ என்று கூறி, திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.
கும்மிருட்டான இரவு நேரத்தில் பாசறையில், கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டுபிடித்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்தாள். இருட்டில் உருவம் தெரியாவிட்டாலும் தன் பாதங்களைத் தொட்டு வணங்கியவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து உடனே பீஷ்மர், திரௌபதியை ஆசிர்வதித்து, தீர்க்க சுமங்கலி பவ! என்று சொல்லிவிட்டார். பிறகுதான் பீஷ்மர், விளக்கின் ஒளியைத் தூண்டிவிட்டு, தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அறிந்தார். திரௌபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று பீஷ்மாச்சாரியரே ஆசிர்வதித்த பிறகு, இனி அவர் அர்ச்சுனனை எவ்வாறு கொல்ல முடியும்? முடியாதே!
இவ்வாறு, தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று ஊகித்து திரௌபதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வணங்கினார். அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் காலணிகளைக் கண்டு திடுக்கிட்டு ‘’பகவானே! இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது தாங்கள் திரௌபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா?’’ என்று வினவ ‘’பீஷ்மரே! திரௌபதியும் அர்ச்சுனனும் என் பக்தர்கள். என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்!’’ என்று பதிலளித்தார்.
ஆம்! அது உண்மைதான் ! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யாராயிருந்தாலும் கைவிடாமல் தக்க சமயத்தில் துணையிருந்து காப்பாற்றுவார்.

No comments:

Post a Comment