Wednesday 10 May 2017

பட்டர் கைசிக புராணம் வாசித்தல்


ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க வேண்டும். அன்றைய தினம் கைசிக ஏகாதசியன்று பட்டர் வெகு விசேஷமாக, அளவற்ற ஞானத்துடனும், ஒவ்வொரு பதத்திற்கும் இதுவரைக் கேளாத அதிவிசேஷார்த்தங்களை பிரவாகமாக உபதேசித்தருளுகின்றார்.

கூடியிருந்தோரெல்லாம் இவரது வாக்பிரவாகத்தில் கட்டுண்டு கிடந்தனர். அரங்கனின் அந்த அர்ச்சை சொரூபத்தில் கூட மார்பும் தோளும் விரிந்து பூரித்தது. தாம் சாத்தியிருந்த மாலையை கழட்டி சாதிக்கச் சொல்கின்றார். திருப்தியடையாது தம் சாத்தியிருந்த பொன்னாடையைப் போர்த்துகின்றார். அப்பவும் திருப்தியடையவில்லை. தம்முடைய திவ்ய திருவாபரணத்தினையெல்லாம் கழட்டி பட்டரை அணியச் செய்விக்கின்றார். இவ்வளவு செய்தும் அரங்கன் திருவுள்ளம் அப்போதும் திருப்தியடையவில்லை! தாம் எழுந்தருளிய ஒரு சிம்மாசனத்தினைக் கொடுத்து பட்டரை தம் எதிரே அமரச் செய்கின்றார். வேறு பல அரிய பரிசில்களை கொடுக்கின்றார். உஹூம்! அரங்கன் இதனால் எல்லாம் திருப்தியடையவேயில்லை. பட்டரும் இதனால் எல்லாம் மகிழ்ந்து பூரிக்கவுமில்லை! ‘இவர்க்கு இதெல்லாம் விட சிறந்தது எது கொடுப்போம்’ யோசிக்கின்றார். பளீரென்று சொல்கின்றார், ”பட்டரே! உமக்கு மேலே வீடு தந்தோம்” என்று இதுநாள் வரை யாரிடமும் சொல்லாத ஒரு சொல்லைச் சொல்கின்றார். இப்போது பட்டரின் மார்பும் தோளும் சந்தோஷத்தினால் பூரிக்கின்றது.

‘மஹாப்ரஸாதம்’ என்று அங்கீகரித்து அந்த சந்தோஷத்துடனே தண்டன் சமர்ப்பிக்கின்றார். க்ருதக்ஞையோடு நமஸ்கரிக்கின்றார். அரங்கனிடத்துச் சொல்கின்றார். ‘நாயன்தே! தேவரீர் அர்ஜூனனிடத்து ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று அருளிசெய்தருளினீர். ஆனால் தேவரீர் தாமே உம்முடைய திருவாயினால் என்னைத் தவிர வேறு யாருக்குமே திருவாய் மலர்ந்து அருளப்பெற்றிராத இந்த பேற்றுக்கு, உடையவர் எமக்கு தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும், எம் தந்தையான ஆழ்வானும், எம்பாருமே’ என்று விண்ணப்பம் செய்கின்றார். கூடியிருந்த வைணவர்களனைவரும் கடல் போன்று கலங்கினார்கள். ‘அரங்கன்தான் உகப்பினால் திருவாய் மலர்ந்தருளினால் நீங்கள் ஏன் அதை அங்கீகரிக்க வேணும்? உம்மைக் கொண்டு இந்த பூமியினைத் திருத்தி விடலாமென்றிருந்தோமே’ என்று கதறுகின்றார். அதற்கு பட்டர், இன்னம் சிறிது நாள் இங்கே அரங்கன் என்னை அடிமைக் கொண்டிருந்தால் பரமபதத்திற்கும் இப்புவிக்கும் ஒரு பாலமே அமைத்திருப்பேன்’ என்கின்றார். திடீரென்று ஒரு கவலைப் பிறந்தது பட்டருக்கு! அரங்கனிடத்து நிவர்த்தி செய்ய கேட்கின்றார் ” ப்ரபோ! அங்கு பரமபதத்திலே அஞ்சேல் என்ற கையும், கவித்த முடியும், புறுவல் பூத்த சிவந்த திருமுகமும், நெற்றியில் கஸ்தூரி திலகமுமாக தேவரீரை பரமபதத்திலே தரிசனம் செய்ய முடியும்தானே? நாம் காணவிட்டால் அங்குள்ள ஒரு மூலையினை முறித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திற்கே மீண்டு வருவேன்’ என்று விண்ணப்பம் செய்கின்றார். அரங்கன் எப்போதுதான் முடியாது என்று பட்டருக்குச் சொல்லியிருக்கின்றான்! ஒப்புக் கொள்ள பட்டர் மூலஸ்தானம் சென்று பெரியபெருமாளையும், உற்சவரையும் ஆபாத சூடம் அனுபவிக்கின்றார். கண்ணாரக் கண்டு ஆனந்திக்கின்றார்!.

பெருமாள் தம் பரிசகர்களனைவரையும் பட்டர் கூட அனுப்புகின்றார். ப்ரம்மரதமொன்று தயார் செய்கின்றார். கோயிலுள்ள அர்ச்சகர் உள்பட அனைத்துக் கொத்து கைங்கர்யபரர்களும், அகில ஸ்ரீவைஷ்ணவர்களும், எல்லா ஆச்சார்யர்களும், மற்றுமுள்ள ஸேவார்த்திகளும், மற்றையோரும் பட்டரை சூழ்ந்து அவரை பிரிய சகியாது கூடவே வருகின்றனர். அரங்கன் முற்றம் அங்கே வெறிச்சோடியது. பட்டர் தம் திருமாளிகையினுள் புகுந்து தம் திருத்தாய் ஆண்டாளை ஸேவிக்கின்றார். ஆண்டாள்,
‘நலமந்தமில்லதோர் (என்றும் நலமேயுடைய) நாடு புகுவீர்!’ என்று ஆசீர்வதிக்கின்றார். பட்டரும், ‘அம்மா! அடியேன் வேண்டுவதும் இதே!’ என்று உகந்தருளுகின்றார். (எப்படிப்பட்ட தாயும் மகனும்! நம் வைணவம் பெற்ற பேறு!)பட்டரின் திருமாளிகையில் கூட வந்தவர்கள் அனைவரையும் வயிறார அமுது பண்ணச் செய்தனர்.

அனைவரும் அமுதுண்ட பின், பட்டர் திருமாளிகையின் நடுவில் அமர்கின்றார். திருநெடுந்தாண்டகத்தினை விசேஷமாக விரிவாக வியாக்யானம் செய்கின்றார். அதில் ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்” என்கிறவிடத்திலே, ”பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைகொண்டபின், பிறவி எனும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்” என்று இதனை இரண்டு முறை மெய்சிலிர்த்து வியாக்யானம் செய்கின்றார். மேற்கொண்டு பேச முடியவில்லை! திருமேனி பூரித்து மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றது! புன்முறுவல் பூத்தவண்ணம் திருமுடியின் மேல் அவர்தம் இரு கைகளும் குவிந்து நமஸ்கரிக்கின்றது. எழுவதற்கு முயற்சிசெய்து பாதி எழுந்த நிலையில் பின்னாலிருந்த அணையினில் சாய்கின்றார். பட்டரின் சிரக் கபாலம் படீரென வெடிக்கின்றது. அரங்கனையே ஆட்கொண்ட அந்த பறவை சுதந்திரம் பெற்று திருநாட்டுக்கு பறக்கின்றது

பட்டர் பரமபதிக்கும் போது அவரது தாயாரான ஆண்டாள் அருகிலுள்ள ஒரு அறையில் அரங்கனைத் தியானித்த வண்ணம் இருந்தாள். பட்டரின் சீடர்கள் ஆண்டாளிடத்து, ”பட்டர் இளைத்து எழுந்தருளியிருக்கிறார்’ என்று பட்டர்பரமபதித்ததை அறிவிக்கின்றார். அந்த பரம ஸ்ரீவைஷ்ணவிக்கு திருவுள்ளம் கலங்கவில்லை! திருமுகம் கன்றவில்லை! கண்ணீர் மல்கவில்லை! வண்டு எப்படி பூவானது நோகாமல் அதன் மேல் அமருமோ, அதுபோன்று பட்டரது திருமேனியினை அவரது ஹ்ருதயகமலத்தினை அலர்த்தி தன் மேல் சார்த்திக் கொண்டாள். ‘பரமபத நிலையனுக்கும் அங்குள்ள நாச்சிமாருக்கும் பெருவாழ்வும் பெருங்களிப்பும் அடையும்படி இந்த ஆத்மா செல்லுகிறதே! உடையவன் உடைமையைக் கைக்கொண்டால், நாம் வெறுக்கலாமோ?” என்று கூறி தம் மகனை நெஞ்சோடு அணைத்தப்படி அமைதியாயிருந்தாள்! கோயிலார்கள் அனைவரும் அனைத்துமே பறிபோனது போன்று கலங்கி கண்ணீர் வடிக்கின்றனர். நஞ்சீயர் வேரற்ற மரம் போல சோகமே உருவாய் வீழ்ந்து கிடக்கின்றார். கூடியிருந்தோர் கண்ணீர் மழை சொரிகின்றனர்! நம்பெருமாளின் முகம் கன்றி காட்சியளிக்கின்றது. நம்பெருமாளும், தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி, திருவெண்சாமரம், திருவாலவட்டம், திருவெண்கொற்றக்குடை, வெண்முத்தின் கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில் அனுப்பிவைத்து, ‘நம்முடைய அவப்ருதோத்ஸவம்(திருமஞ்சன உத்ஸவம்) கொண்டாடுமாப்போல் பட்டருக்கும் அவப்ருதோத்ஸவங் கொண்டாடுங்கோள்” என்று திருவுள்ளமாய், பெருமாளும் நாச்சிமாருமாய் திருமஞ்சனம் கண்டருளி, ‘நம் புத்ரனை இழந்தோமே!’ என்று வருந்தி வெற்றிலைப் பாக்குக் கூட அமுது செய்யாமல் வருத்தமுடனே தம்மிடத்திற்கு எழுந்தருளினார்.

நஞ்சீயர் உள்ளிட்ட கோயிலார்கள் பட்டருடன் கூடப் பிறந்த வேதவியாசப்பட்டரைக் கொண்டு பட்டருக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் செய்து பள்ளிப்படுத்துகின்றனர். அவப்ருதோத்ஸவமும் நம்பெருமாள் திருவுள்ளப்படிச் செய்து மீண்டு வருகின்றனர். வேதவியாசப்பட்டர் பட்டரது பிரிவினால் வெறிச்சோடிப் போன திருமாளிகையினைக் கண்டு மனம் வெதும்பி சோகித்து அழுகின்றார். ஆண்டாள் பட்டர் பெற்றப் பேற்றினைக் கூறி தம் இன்னொரு மகனை சமாதானப்படுத்துகின்றாள். பட்டருக்கு தீர்த்த திருவத்யயநம் ஆனவுடன் வேதவியாச பட்டர் பெருமாளைத் திருவடித் தொழச் செல்கிறார்.

அரங்கன் சீராமப்பிள்ளையை (வேதவியாசப்பட்டரினை) அருளப்பாடிட்டு அருளுகின்றார், ” பட்டரையிழந்தோம் நாம்! உமக்கு நாம் இருக்கின்றோம்! முசியாதே கொள்ளும்!(வருத்தப்படாதே!)” என்று தேற்றி வேதவியாசப்பட்டருக்குப்ரஹ்மரதம் பண்ணுவித்துத் திருமாளிகையில் கொண்டு சேர்க்கின்றார். பட்டருக்குப் பிறகு வேதவியாசப்பட்டர் பரம சிரத்தையுடனே ஸ்ரீரங்கஸ்ரீயின் தர்ஸநம் நிர்வஹித்து வருகின்றார்.

பட்டர் அதிக திவ்யதேசங்களுக்குச் சென்றதாய் ஏதும் குறிப்புகளில்லை. பட்டரை அதிவிசேஷமாய் ஈர்த்து தம்மிடத்தேயே வைத்துக் கொண்டது அரங்கன்தான்!. நம்பெருமாள் யாரிடமுமே அதிகம் பேச மாட்டார். பெரும்பாலும் கனவில்தான் தோன்றி பேசுவார். பேசினாலும் சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு மறைந்து விடுவார். அந்த அரங்கனே பட்டரிடத்தில் அதீதப்ரீயனாய், அந்தரங்கனாய், அதிகம் ஈர்க்கப்பட்டவனாய், அற்புத தந்தையாய், அளவற்ற நேசமுடையவனாய், பரிவுடனிருந்தார். அரங்கன் அதிகம் அளவளாவியது பட்டருடன் மட்டுமே!. பட்டரிடத்து அளவிலாத சந்தோஷத்துடன் மேலே வீடு அளித்தேன் என்று அனுப்பி வைத்தாலும் அர்ச்சையில் கண்டிப்பாக இருதலைக் கொள்ளி எறும்பாய் அவனும் அவதிப்பட்டிருப்பான்!.

பட்டரும் மேல்கோட்டை திருநாராயணபுரம், திருக்கோஷ்டியூர் முதலிய திவ்யதேசங்களில் எல்லாம் தங்கியிருந்தபோதும், எப்போது ஸ்ரீரங்கம் திரும்புவோம் என்றேதானிருந்தார்.

‘நம்பெருமாள் அஞ்சலென்ற கை மறுத்தாலும், அவ்வாசலெழிய வேறெரு போக்கு உண்டோ?’ என்று கூறியபடி திருவரங்கத் திவ்ய தம்பதிகளைத் தவிர மற்றொரு கதியின்றியிருந்தார். அரங்கனிடத்து கைங்கர்யம் செய்பவர்கள் யாருமே இப்படியிருப்பதுதான் நற்கதி! பிறவிப்பயன்! அரங்கன் கற்பக விருட்சம்! நாம் எதை மனதார வேண்டுகின்றோமோ அதை கைவல்யமாக அளிப்பதில் வல்லவன்!. நாமும் பட்டர் எப்படி நம்பெருமாளையும் தாயாரையும் ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்திருந்தாரோ,அதேப் போன்று நம்முடைய தாயாகவும் தந்தையாகவும் போற்றி வணங்க வேண்டும். அந்த மனப்பக்குவத்தினை நன்கு வளர்த்து நம்பெருமாளும் தாயாருமே கதியென்று கிடக்க வேண்டும். நீயே கதியென்று கிடந்தால் நம் விதியை அவன் பார்த்துக் கொள்வான்.

‘எனது நான் எனச் செருக்கி மமதையுற்று அலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப தெய்வமே!
எனதுளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாடும்
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ!”

பட்டரிடத்து அரங்கன் மேலே வீடு தந்தோம் என்றவுடனேயே ‘மஹாபிரஸாதம்’ என்று ஏற்றுக்கொண்ட பிறகு பட்டருக்கு ஒரு சந்தேகம். இதேப் போன்று நம்பெருமாள் அங்கு ஸேவை சாதித்தால்தான் போவேன் என்று அடம் பிடிக்கின்றார் அரங்கனிடம்!. நெகிழ்ந்து போனான் அரங்கன்!.

பக்தி என்பது எப்படியிருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார்கள்.
பட்டர் நஞ்சீயருக்குத் திருவாய்மொழிக்கு பிள்ளான் என்பவரது உரைப்படி ஆறாயிரமும் நன்றாக உபதேசித்தார். நஞ்சீயரும் அதனை நன்றாக அறிந்து பட்டரை அனுசரித்து அவருடைய அனுமதியைப் பெற்று, திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரம் படியாக ஒருவ்யாக்யானம் அருளிச்செய்தார். ‘அதனைத் தெளிவற பட்டோலை கொண்டு எழுதி தருவார் எவரும் உண்டோ?’ என்று விசாரிக்க, நஞ்சீயரின் சீடர்கள் நம்பூர் வரதராஜன்என்பவரை அறிமுகப்படுத்தினர். நம்பூர் வரதராஜனின் எழுத்து மணி மணியாய் இருந்தது. ஆயினும் நஞ்சீயருக்கு ஒரு சிறிய நெருடல். ‘இது திருவாய்மொழிக்கான வ்யாக்யானமாகையினாலேஒரு விலக்ஷணரைக் (வைஷ்ணவ லக்ஷணம் பூர்ணமாகக் கொண்டவர்) கொண்டு எழுதுவிக்க வேண்டும். வெறும் திருவிலச்சினம், திருநாமம் மாத்ரமுண்டான இவரைக் கொண்டு எழுதுதல் தகுமா? என்று யோசிக்கலானார். வந்தவர் புத்திசாலி. ‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்கு வரும்படியே திருத்திப் பணிகொள்ளலாகாதோ?’ என்று கேட்க, நஞ்சீயர் மிகவும்திருவுள்ளம் உகந்தார். பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து பூர்ணமாய் பிரபந்நராக ஆக்குகின்றார்.

அவருக்கு ப்ரபந்நநிஷ்டைகளை பூர்ணமாக உபதேசித்து, தாம் எழுதிய திருவாய்மொழிக்கான ஓன்பதினாயிரம் படியையும் ஒரு முறை , தெளிவாக உபதேசித்து அருளுகின்றார். தாம் வியாக்யானம் எழுதிய பட்டோலையை அவர் கையிலே தருகின்றார். வந்தவர், ‘அடியேன்! ஊரிலே போய் எழுதிக்கொண்டு வருகிறேன்!” என்று கூறி அனுமதி பெற்று காவேரியினைக் கடந்து தம் ஊருக்குச் செல்கின்றார். ஓரிடத்தில்காவேரியில் ஆழம் அதிகமிருக்கவே, தம்முடைய தலையில் நஞ்சீயரின் ஓலைப்பிரதிகளைக்
கட்டிக் கொண்டு நீந்துகின்றார். அவ்வோலைப் பிரதிகள் தவறுகின்றன. காவேரியின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்படுகின்றது. ‘பட்டோலை போய் விட்டதே! இனி நாம் என்ன செய்யக் கடவோம்” என்று சோகமாகின்றார். பின்னர் ஒருவாறு தேறிநஞ்சீயர் தமக்கு அருளிச் செய்தமையை நினைவுக்குக் கொண்டு வந்து அர்த்தங்களைத் தப்பாமல் பட்டோலைச் செய்கின்றார். அவர் தமிழ் புலமை மிக்கவரானதால் சில பதங்களுக்கு தமக்குதித்த கம்பீரமான பதங்களாலே வியாக்யானம் எழுதுகின்றார். மிக அழகாக நேர்த்தியாகபட்டோலைப் படுத்தி திரும்பவும் நஞ்சீயரிடத்து வந்து அதனைச் சமர்ப்பிக்கின்றார்.நஞ்சீயர் தாம் அருளிச் செய்தமை சிலவிடங்களில் மாறுபட்டு அதியற்புதமான வியாக்யானங்களைக் கண்டு, ‘இதென்?” என்று வினவுகின்றார். நம்பூர் வரதராஜன்நடுங்குகின்றார். பேசாது நிற்கின்றார். ‘நீர் பயப்பட வேண்டாம்! உண்மையைச் சொல்லும்!” என்கிறார் நஞ்சீயர். நடந்ததை கூறுகின்றார் வரதராஜன். நஞ்சீயர் வியந்து, ‘இவருடைய புத்தி விசேஷமிருந்தபடி என்தான்! இவர் மஹா சமர்த்தர்! நன்றாக எழுதியிருக்கின்றார்” என்று புகழ்ந்து மிகவும் திருவுள்ளமிரங்கி வரதராஜனை
வாரியணைக்கின்றார்.‘இவர் நம்முடைய பிள்ளை, திருக்கலிகன்றிதாஸர்” என்று திருநாமஞ்சாற்றி, தம்முடனேயே அவரை அரைக்ஷணம் கூடப் பிரியாது ஸகலவித சாஸ்திரங்களையும்அர்த்த விசேஷங்களையும் அவருக்கு அருளிச் செய்கின்றார். அவரும் ‘சீயரையல்லாது‘தேவுமற்றறியேன்’ என்று எழுந்தருளியிருந்தார். சீயர் நம்முடைய பிள்ளை என்று அணைத்தமையால் அன்று முதல் வரதராஜன் ‘நம்பிள்ளை’ என்றே அழைக்கப்பட்டார்.
_______________________________________________
ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரம்படி, 32000படி, என்கின்றோமே, இந்த ‘படி’ என்றால் என்ன?

படி என்றால் அளவு. உயிர்மை எழுத்து உயிரெழுத்து ஆகிய இரண்டும் சேர்த்து 
32 அட்சரம் கொண்டது
ஒரு க்ரந்தம்.
ஒரு க்ரந்தம் என்பது தமிழில் ஒரு படி.
6000 க்ரந்தம் கொண்டது விஷ்ணு புராணம்.
குருபரம்பரை ஆறாயிரப்படியும், விஷ்ணுபுராணமும் ஏட்டில் சம அளவில் இருந்தமையால்
‘குருபரம்பரை ஆறாயிரப்படி ‘ என்றழைக்கப்பெற்றது.
இதேப் போன்று இராமாயணம் 24000 க்ரந்தம். இதுவும் பெரியவாச்சான் பிள்ளை 24000 படியும் சம அளவில்
இருந்ததால் பெரியவாச்சன் பிள்ளை 24000படி என்றழைக்கப்பெற்றது.
சுதப்பிரகாசிகை 36000 க்ரந்தம். இதுவும் ஸ்ரீபாஷ்யமும் ஒரே அளவில் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யம் ஈடு 36000படி என்றழைக்கப்பெற்றது.

No comments:

Post a Comment