Monday 5 August 2019

உடையவர்

ஸ்ரீமதே லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பரப்ரம்மணே நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:

குரு பரம்பரை விவரணம் : லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

எம்பெருமானார் (ஸ்ரீ ராமானுஜர் / யதிராஜர் / உடையவர்) :

1. ’உபய விபூதி ஐஸ்வர்யங்களையும் உமக்குத் தந்தோம்; இனி நம்முடைய கோவில் கார்யங்களை எல்லாம் நீர் நடத்தி வர வேண்டியது; நீரே உடையவர்’

என்று அர்ச்சகர் முகத்தாலே அருளிச் செய்தான் திருவரங்கன்.

அன்று முதல் ஸ்ரீராமானுஜருக்கு ‘உடையவர்’ என்ற திருநாமம் பெயர் பெற்று விளங்கிற்று.

2. உடையவரும், அரங்கனின் கட்டளைப்படி அகளங்கநாட்டாழ்வானை தனது சிஷ்யனாக்கிக் கோவில் கைங்கர்யத்தை சரிவர நடத்தி நியமித்தருளினார்.

# ஸ்ரீரங்கம், என்பது 108 திவ்ய க்ஷேத்ரங்களில் முதன்மையானது.

# அது, பாஞ்சராத்ர ஆகம விதிப்படி, அமைக்கப் பட்டிருக்கிறது; வேதவ்யாஸர், மஹாபாரதத்தில்,

‘பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸனஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் ஸர்வேஷு ச ந்ருப் ஸ்ரேஷ்ட க்ந்யானீஷ் வேதேஷு த்ருஷ்யைதே’

என அருளினார்.

அதாவது, வேத சாரமான பாஞ்சராத்ர சாஸ்த்திரத்தை ஸர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணன் தானே அருளினான், என்பதாகிறது.

#  இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்துன, பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு, பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடம் உபதேசித்தார்.

# பாஞ்சராத்ரமானது ‘ஏகாயன வேதம்’ என்றும் அழைக்கப் பெறுகின்றது. அதாவது, தனக்கு இணையற்ற மோக்ஷமாகிற உயர்ந்த பலனை அடைய வழி கூறும் சாஸ்த்திரம் பாஞ்சராத்திரம்.

‘சாந்தோக்ய உபநிஷத்’ ல் நாரதரும் சனகரும் தம்தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதியாகிறது, பாஞ்சராத்திரம்.

# ஒரு காலத்தில் சில முக்கிய பாஞ்சராத்ர ஆகம முறைப்படியுள்ள கோவிலில் பூஜை செய்தவர்கள் அனைவருமே ஔபகாயன, சாண்டில்ய, பாரத்வாஜ, கௌசிக, மௌஞ்யாயன ஆகிய ஐந்து கோத்ரத்தினை சேர்ந்தவர்களாக மட்டுமேயிருந்தனர். அது போன்று அவர்கள் சுக்லயஜூர் வேதம், காண்வ சாகை என்ற பிரிவைச் சார்ந்தவர்களாயும் மட்டுமே இருந்தனர்.

# இந்த பாஞ்சராத்ரமானது,

‘ஸ்ரீமந் நாராயணனைத் தவிர இதர தெய்வங்களை நாடாதே’ என்கிறது.

‘யஸ்து ஸர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தப: வாஸூதேவைக நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:’

அதாவது,

‘ஸ்ரீவாஸூதேவனை மட்டுமே தியானி – இதர தேவதைகளை நாடவேண்டா’

என்று கூறுகின்றது.

‘மறந்தும் புறம் தொழா மாந்தர்’

என்னும் மாண்பை ஆழ்வார்களை போல் ஆகமமும் பறை சாற்றியது.

ஸ்ரீவைஷ்ணவ சம்பரதாயத்தின் முக்கியமான இந்த கொள்கை பாஞ்சராத்ரத்தில் ஆழமாக எடுத்துரைக்க பட்டுள்ளது.

# இந்த பாஞ்சராத்ரமானது ஸ்ரீமந் நாராயணனை எப்படியெல்லாம் வழிபடுதல் வேண்டும் – நாம் எந்த ஒரு திடமான முடிவோடுயிருக்க வேண்டும் – எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்லுகின்றது.

ஆகமம் என்பதற்கு ‘அணுகுதல்’ என்ற பொருளாகும்; பகவான் ஜீவன்கள் உய்விப்பதற்கு, தன்னை வந்தடைய தானே வந்து கற்பித்ததுதான் இந்த பாஞ்சராத்ரம் என்கின்ற அணுகுமுறை – அதாவது பாஞ்சராத்ர ஆகமம்.

# ஆக, பாஞ்சராத்ர ஆகம விதிப்படி, கோவில் கைங்கர்யங்களை செய்து போக, உடையவர், அகளங்கநாட்டாழ்வானை நியமித்தார்.

3. தன் தம்பி முறையான கோவிந்த பட்டரை திருத்தி பணி கொள்ள திருமலை நம்பிகளிடம் அனுப்பப் பட்ட அந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் திரும்பி வந்து  உடையவரை ஸேவித்து நின்றனர்.

அவர்களது முக மலர்ச்சியைக் கண்டு சென்ற கார்யம் அனுகூலமாயிற்று என உணர்ந்து விவரங்களைக் கோரினார் உடையவர்.

யதிராஜரின் (உடையவரின்) நியமனப்படி திருமலை சென்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள், திருமலைநம்பிகளை சந்தித்து யதிராஜரின் எண்ணத்தை உரைத்தனர்.

4. அதற்கு, திருமலை நம்பிகளும் தானும் அவ்வாறே பல காலம் நினைத்து வந்ததாய்க் கூறி, கோவிந்த பட்டரின் தேவதாந்தர சம்பந்தத்தினால், மிகுந்த மனம் வருத்தம் அடைந்தவராகவே இருந்தார்.

# ஸ்வாமி நம்மாழ்வார், திருவாய்மொழியில்,

‘நாடிநீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன்படைத்தான் வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறைகோயில், மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர் பரந்தே’

அதாவது,

நீங்கள் விரும்பி வணங்குகின்ற தெய்வங்களையும் உங்களையும் ஆதி காலத்திலேயே படைத்தான், அழிதல் இல்லாத கல்யாண குணங்களையும் புகழையுமுடைய ஆதிப்பிரான். அவன் மனம் விரும்பி வசிக்கின்ற கோயில், மாடங்களும் மாளிகைகளும் சூழ்ந்து அழகு நிறைந்திருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தைப் பாடி ஆடித் துதித்துப் பரந்துசெல்லுங்கோள்,

என்பதாயிற்று.

# ஸர்வேஸ்வரனான கண்ணன் தன்னை பூஜிப்பதிலும் மற்ற தேவதைகளை பூஜிப்பதிலும் உள்ள  வேறுபாட்டை பகவத் கீதையில் (9-24) அர்ஜுனனுக்கு விளக்குகிறான்.

‘அஹம் ஹி ஸர்வ யஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச. ந து மாம் அபிஜாநன்தி அத தத்வேநது ச்யவந்திதே’

அதாவது,

‘எந்த ஒரு தேவதையை பூஜித்தாலும் நான் அன்றோ அவர்கள் செய்யும் பூஜைகளை ஏற்று கொள்பவனாயும் பலனை கொடுப்பவனாயும் இருக்கிறேன். இதை அறியாதவர்கள் மற்ற தேவதைகளை பூஜித்து, அற்ப பலனை பெற்று அதனையும் பறி கொடுக்கின்றனர்.’

ப்ராக்ருத லோகங்களில் உள்ள (ப்ரும்மா இருக்கும் ஸத்ய லோகம் உள்பட) சிலர் தெய்வமாக நினைக்கும் ஸகல தேவதைகளும் ஸர்வேஸ்வரனான கண்ணனின் ஆதிக்கத்திலேயே இருக்கிறார்கள் என  ஆகிறது. கண்ணனே பரமாத்மா ஆனபடியால், எந்த ஒரு தேவதையை ஆராதித்தாலும், அந்த தேவதைக்கு அந்தர்யாமியாகவும், ஆத்மாவாகவும் இருக்கும் கண்ணனே பலன் அளிக்கிறான்.

கண்ணனை தவிர  மற்ற தெய்வங்களை மிக ஸ்ரத்தையாக, வேதங்களில் சொன்ன படி, பூஜித்த போதிலும் பலன்களில் குறைபாடுகள் காணப்படுவது எதனால் என்றால், ஸர்வேஸவரனான கண்ணனுக்கும் அவர்கள் வழி படும் மற்ற தெய்வங்களுக்கும் உபநிஷத்துகளில் சொல்லப் பட்ட மேற் கூறிய சம்பந்தத்தை ( ஸர்வேஸ்வரனான கண்ணன் பரம் பொருள் - மற்ற அனைத்து தேவதைகளும் அவன் அடிக்கீழ் உள்ள தாழ்ந்த தெய்வங்கள்) உணராமல்   செய்யும் பூஜையினால் தான்.

# ஆக, இதை விளக்க, கோவிந்த பட்டர் இருந்த காளஹஸ்திக்கு தன் சிஷ்யர்களுடன் திருமலை நம்பிகள் விரைந்தார்.

5. ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ ( கோவிந்த பட்டர் ) சிவ பூஜைக்காக புஷ்பம், வில்வம் எடுக்கும் தருணம், திருமலை நம்பிகள் தன் சிஷ்யர்களோடு அங்கு அமர்ந்து ஆழ்வார் பாசுரங்களுக்கு அர்த்தம் விளக்கி வந்தார்.

அப்போது,

‘தேவும் எப் பொருளும் படைக்கப், பூவில் நான்முகனைப் படைத்த, தேவன் எம் பெருமானுக்கு அல்லால், பூவும் பூசனையும் தகுமே?’

என்ற ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியை விளக்கி வந்தார்.

அதாவது,

தேவர்களில் தொடங்கி, அனைத்து பொருட்களையும் படைக்க ப்ருஹ்மாவைம் படைத்த ஸர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணனை அன்றி மற்ற எவருக்கேனும் பூவைக் கொண்டு பூஜை செய்வது தகுமா? (தகாது)

என்கிற அர்த்தத்தை விளக்கி வந்தார் திருமலை நம்பிகள்.

இதை அங்கிருந்து கேட்ட உள்ளங்கை கொணர்ந்த நாயனார்,

‘தகாது, தகாது’

என கூறிய வண்ணம்,  திருமலை நம்பிகளிடம் வந்து ஸேவித்து, தம்மை ரக்ஷிக்க வேண்டினார்.

காலத்தை இழந்தத்ற்காக வருத்தப் பட்டு, திருமலை நம்பிகளின் திருவடிகளில் விழுந்து கதறி அழுதார்.

திருமலை நம்பிகள், நாயனாரே ஸமாதானப் படுத்தி, எழுந்திருக்கச் செய்தார்.

No comments:

Post a Comment