Monday 2 September 2019

பஞ்ச சம்ஸ்ஹார உற்சவம்- மதுராந்தகம்.


🙏🙏🙏👌👏👌👏
பஞ்சசம்ஸ்ஹாரம்/சமாஸ்ரயணம் என்னும் கிரியை ஒவ்வொரு வைணவருக்கும்,அவரது ஆசார்யர் செய்து வைக்கும் மிக இன்றியமையாத வைபவம்.
மோட்சம் அடையும் ஆசை யுடையோர் எல்லாம் முதலில் பஞ்ச சம்ஸ்ஹாரம் செய்து கொண்டு,திருமால் அடியார்கள் என்று தங்களைப் பிரகடனப் படுத்திக் கொள்கிறார்கள்.

ஆசையுடையோரெல்லாம் மோட்சம் அடையும் வழியை எளிதாக்கிய,ஸ்வாமி ராமாநுஜர்
தம் ஆசார்யர் பெரிய நம்பி ஸ்வாமியிடம் பஞ்ச
சம்ஸ்ஹாரம் செய்துகொண்டார்.
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் ஆவணிமாதம்.
சுக்லபட்சம்,பஞ்சமி திதியன்று,
பெரிய நம்பிகள் இளையாழ்வாருக்கு பஞ்சசம்ஸ்ஹாரம் செய்து வைத்தார்.அந்த வைபவம் ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில்(இந்த ஆண்டு நாளை 03/09/2019) பஞ்சசம்ஸ்ஹார
உற்சவமாக மதுராந்தகத்தில் கொண்டாடப் படுகிறது.

இளையாழ்வார்,ராமானுஜர் ஆனார்
🙏🌺📢☀️✌️☘🙏
இளையாழ்வாருக்கு ஏற்பட்ட 6 சந்தேகங்களை,திருக்கச்சி நம்பிகள் மூலம்,காஞ்சி வரதராஜப்பெருமாள் தீர்த்து வைத்தார் .அதில் 6 ஆவது வார்த்தை:
"பூர்ணாசார்யம் மஹாத்மானம் ஸமாஶ்ரய குணாஶ்ரயம் (எல்லா நற்குணங்களும் பூரணமாக உள்ள பெரியநம்பி ஸ்வாமிகளை,ஆசார்யராகப் பற்றிக் கொள்".
இதைக் கேள்வியுற்ற ராமானுஜர் பெரிய நம்பிகளின் திருவடிகளில் சரணமடைய,உடனே ஶ்ரீரங்கம்
புறப்பட்டார். அதே சமயம், ஆளவந்தாரின் நியமனப்படி,
ராமானுஜரை ஶ்ரீரங்கம் அழைத்துவர பெரியநம்பி ஸ்வாமிகள் ஶ்ரீரங்கத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கிப் புறப்பட்டார்.

இருவரும் மதுராந்தகத்தில்
(சென்னையிலிருந்து 77 கி.மீ.தென் மேற்கில்)சந்தித்துக் கொண்டனர்.இளையாழ்வார் பெரியநம்பிகளிடம் தண்டம் சமர்ப்பித்து தமக்கு உடனே அங்கேயே,பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைக்கும்படி வேண்டி னார்.நம்பிகள்,காஞ்சிபுரம் பக்கத்தில் தானே இருக்கிறது,
அங்கு போய் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் செய்து கொள்ளலாம் என்றார்.ஆனால் இளையாழ்வாரோ அந்த ஷணமே,அங்கேயே செய்ய வேண்டும் என்றும்,அதற்கு திருவாய்மொழியின்"மின்னின் நிலையிலே மண்ணுயிர் ஆக்கைகள்"(இப்பூவுலகில் வாழும் உயிர்களின் காலம் நிலையற்றது;மின்னலைப் போல ஒரு நொடியின் அணுவளவில் அழியக்கூடியது),பாசுரத்தை
மேற்கோள் காட்டினார்.இவரின் வைராக்கியத்தை மெச்சிய ஆசார்யர்,மதுராந்தகம்
ஏரியில் நீராடி வந்த(அந்த இடம் ஶ்ரீ பாஷ்யகாரர் படித்துறை என்றழைக்கப்படுகிறது) இளையாழ்வாருக்கு
ஏரி காத்த ராமர் கோவில் மதில் சுவரருகில் இருந்த மகிழமரத்தின் அடியில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார்.

1.தாப ஸம்ஸ்காரம்-சங்கு சக்கரப் பொறியொற்றுதல்.
2.புண்டர ஸம்ஸ்காரம்-த்வாதச திருமண்காப்பு என்னும் 12 திருமண்காப்பு இடுதல்.
3.நாம ஸம்ஸ்காரம்-தாஸ்ய நாமம் சூட்டல்-அவ்வாறே இளையாழ்வாருக்கு"ராமானுஜர்" என்னும் பெயரை ஆசார்ய/அதிகாரபூர்வமாக சூட்டினார்.ஏற்கனவே அவர் ராமானுஜர் என்று அறியப்பட்டாலும்,
ஆசார்யன் அழைத்ததால் அன்றிலிருந்து தான் மாண்பு பெற்றது.
4.மந்திரஸம்ஸ்காரம்-திருமந்திரம்,துவையம்,
சரம ஸ்லோகம் என்னும் ரஹஸ்யத்ரைய உபதேசம் (இதனால் மதுராந்தகம்"துவையம் விளைந்த திருப்பதி"என்று போற்றப்படுகிறது).
5.யாக ஸம்ஸ்காரம்-
பெருமாளுக்குப் பூஜை செய்வதற்கான திருவாராதனைக் கிரமம்,என்னும் ஸம்ஸ்காரங் களைச் செய்து வைத்தார்.

மதுராந்தகத்தில் நாளை:
🔔📢🔊📯🥁🎺🔔
நாளை 03/9/2019
செவ்வாயன்று மதுராந்தகத்தில் நடைபெறும் வைபவங்கள்:.
1.விஸ்வரூபம்-காலை 7 மணி
2.தீர்த்தவாரி-8.00am
3 திருமஞ்சனம் 9.00am
3 பெரிய நம்பிகள்,ஏரி காத்த ராமர் மங்களாசாசனம்-10.30
4.பஞ்ச ஸம்ஸ்கார உற்சவம் 1.00pm
5 கோஷ்டி விநியோகம் 2.00pm
6 ஶ்ரீ பாஷ்யம்,திருவாய்மொழி- வித்வத் ஸதஸ் 3.00-6.00pm.
7.புஷ்ப பல்லக்கில் புறப்பாடு,மாலை 6.30.pm
8.ராமாநுஜர் சந்நிதியில் சாற்று முறை 8.pm

ராமானுஜருக்கு,பெரிய நம்பிகள் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்த தாமிரத்தால் ஆன,சங்கு, சக்கரம்,பெரிய நம்பிகளின் திருவாராதனைப் பெருமாளான ஶ்ரீ நவநீத கிருஷ்ணர்,
தாமிரத்தால் ஆன திருவாராதனை வட்டில்கள் ஆகியவை இன்றும் உள்ளன. அவற்றுக்கும் பூஜை நடைபெற்று வருகிறது. 1937 ல் தான் இவை கண்டு பிடிக்கப்பட்டன.சேத் மகன்லால் பங்கூர் என்பவர் 1937 ல் கோவில் திருப்பணி செய்தார்.
அப்பொழுது கோவில் திருச்சுற்றில் ஒரு குகை இருந்ததைப் பார்த்தார்கள்.
அதைத் தோண்டிப் பார்த்த போது 20 அடிக்குக் கீழே ஒரு சிறிய மண்டபமும்,அதனுள் மேற்குறிப்பிட்ட திருச்சின்னங்களும் இருந்தன.

மதுராந்தகம்/ஏரிகாத்த ராமர் பெயர்களின் சிறப்பு:
🙏🏿🙏🏿🙏🏿🌺🌸🌸🙏🏿🙏🏿🙏🏿
விபந்தக முனிவர் என்பவர் கருணாகர ராமரைத் துதித்து தவம் செய்தார்.வனவாசம் வந்த ராமர்,அவருடைய ஆஸ்ரமத்துக்கு வந்து அவருடன் சில நாட்கள் தங்கினார்.முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கையிலிருந்து திரும்பி வரும் போது,புஷ்பக விமானம்,இந்த இடம் வந்ததும் அதாகவே நின்று விட்டதாக வும்,சீதா,ராம,லட்சுமணர்கள் கீழே இறங்கி மீண்டும் விபந்தகருக்கு அருள் புரிந்ததாகவும் ஸ்தல புராணம்.அந்த "மதுர"மான (இனிய) நிகழ்வால் மதுராந்தகம்.

ஏரி காத்த ராமர்:
ஸ்தல புராணப்படி.ஒரு முறை பலத்த மழை பெய்ததால் மதுராந்தகம் ஏரி உடையும் நிலைஏற்பட்டபோது,வில்லேந்திய ராமரும்,லட்சுமணரும் ஏரிக்கரையில் நின்று அணை உடையாமல் காத்தனர்.
அப்போது மழை வெள்ளத்தைப் பார்க்க வந்த அன்றைய பிரிட்டிஷ் கலெக்டர்,இந்த அதிசய வைபவத்தைப் பார்த்து மெய் சிலிர்த்தார்.ராம பக்தர் ஆனார்.கோவிலைப் புணரமை த்து,தாயார் சந்நிதியை சிறப்பாகக் கட்டினார்.இதனால் ஏரி காத்த ராமர்.

ஆனால் ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரை இதை எவ்வளவு அழகாகச் சொல்கிறது என்று பாருங்கள்:
"ஶ்ரீ லக்ஷ்மிநாதன் என்னும் மிகப் பெரும் கருணைக்கடலிலிருந்து,
நம்மாழ்வார் என்னும் கார்மேகம்,ஞானம் என்னும் நந்நீரை.நாதமுனிகள் என்னும் மாமேருவின் மீது பெய்து, உய்யக்கொண்டார்,மணக்கால் நம்பிகள் என்னும் இரண்டு அருவிகளாகப் பொழிந்து, ஆளவந்தார் என்னும் நதியாகப் பிரவகித்தார்.அந்த நதியிலிருந்து,பெரிய நம்பிகள்,பெரிய திருமலை நம்பிகள்,திருக்கோஷ்டியூர் நம்பிகள்,திருவரங்கப் பெருமாள் அரையர்,திருமாலை ஆண்டான் என்னும் 5 ஓடைகளாகப் பிரிந்து,ஶ்ரீ ராமானுஜர்,என்னும் பெரிய ஏரியை நிரப்பின.அந்த வற்றாத ஏரியிலிருந்து 74 கால்வாய்கள்(ராமானுஜர் நியமித்த 74 சிம்மாசனாதி பதிகள்) மூலம் என்றும் நந்நீர் பெருகி வருகிறது"
இந்த ராமானுஜர் என்னும் ஏரியைக்காத்து,சம்பிரதாயத்துக்கு அளித்தார் ஶ்ரீ ராமபிரான்!

படங்கள்:
1)மதுராந்தகம் கோவில் கோபுரம்.
2)ஶ்ரீ பாஷ்யகாரர் படித்துறையில் ராமானுஜர் தீர்த்தவாரி.
3) ராமானுஜர்,பெரியநம்பிகள் மூலவர்/உற்சவர்
4)ஶ்ரீ ராமர் மங்களாசாசனத்துக்கு இருவரும் புறப்பாடு
5)பஞ்ச ஸம்ஸ்காரம் செய்த இடமான மகிழமரம்
6) & 6ஆ)பஞ்ச சம்ஸ்கார மண்டபம்.-நவநீத கிருஷணர்,சங்கு,சக்கரங்கள்
7)பெரிய நம்பி ஸ்வாமிகளுக்கும்,
ராமானுஜருக்கும் திருமஞ்சனம்
8)சங்கு,சக்கரங்கள்
9)பஞ்ச ஸம்ஸ்கார வைபவம்
10)ஶ்ரீகிருஷ்ணர்,சங்கு சக்கரங்க இருந்த குகை அறை
11)வித்வத் ஸதஸில் வித்வான்கள்
12)(ஏரி காத்த) கோதண்டராமர்,
சீதாப்பிதாட்டியார்,இளையபெருமாள்
13)ஏரி காத்த ராமர்-சித்திர வடிவில்

Thanks to
(பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

No comments:

Post a Comment