Skip to main content

விரும்பிய வடிவில் வருவான்...


குருவாயூரில் திருவிழாக் காலம். கண்ணக் கடவுள் உற்சவ மூர்த்தியாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். பக்தர்களோடு பக்தர்களாக நாராயண பட்டதிரியும் பூந்தானமும் முன்வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். இருவரும் பக்தியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். 

பட்டதிரி மெத்தப் படித்த மேதாவி. நாராயணீயம் என்ற உன்னதக் காவியத்தை எழுதிய புலவர். பூந்தானம் படிப்பறிவற்றவர்.

 "ஞானப்பானை' என்ற தத்துவ பக்திக் கவிதைகளின் ஆசிரியர். பூந்தானத்திற்கு பட்டதிரியிடம் மிகுந்த மதிப்புண்டு. பட்டதிரி பெரும் கல்வியாளர் அல்லவா? கல்வியறிவற்ற தாம் அவரிடமிருந்து நல்லுரைகள் பெற்று அவற்றின்படி நடக்க வேண்டும் என்று அடக்கமே வடிவான பூந்தானம் நினைப்பதுண்டு. 

பட்டதிரி பெரும் பக்தராக இருந்தாலும் பூந்தானத்தைக் குறித்து, படிப்பில்லாதவர் அவர் என்று பட்டதிரியிடம் இளக்காரம் தோன்றுவது உண்டு. 

கண்ணன் இரண்டு மாபெரும் பக்தர்களின் உன்னத பக்தியையும் ஏற்றான். என்றாலும் பட்டதிரியின் கல்விச் செருக்கைச் சற்றுத் தட்டிவைக்கத் திருவுளம் கொண்டான்.
உற்சவ மூர்த்தியைத் தோளில் சுமந்திருந்த அன்பர்கள் பல்லக்கை வெளியே கொண்டுவர முனைந்தார்கள். கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஏதோ இடித்தது. எங்கே எது இடித்துத் தடுக்கிறது என்று பல்லக்குத் தூக்கியவர்கள் ஆராய்ந்தார்கள். அவர்கள் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. 

அப்போது பட்டதிரியின் அருகே நின்றிருந்த பூந்தானம் பரபரப்படைந்தார். உற்சவ விக்கிரகத்தையே கூர்ந்து பார்த்த அவர் திடீரென்று ஒரு விந்தையான வாக்கியத்தைச் சொன்னார். அதைக் கேட்டு எல்லோரும் திகைத்தார்கள். 

பட்டதிரி பூந்தானத்தைப் பார்த்து ஏளனப் புன்முறுவல் பூத்தார்.
எதையும் கவனியாத பூந்தானம், மீண்டும் அதே வாக்கியத்தைச் சொன்னார். அவர் மறுபடி அந்த வாக்கியத்தைச் சொல்லி முடிப்பதற்குள் மூல விக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் கண்களில் கண்ணீர் வழிய, உற்சவ விக்கிரகத்தை நோக்கி ஓடி வந்தார்.

விம்மலுடன், பூந்தானம் சொன்ன வாக்கியத்திற்கு வலுச்சேர்க்கிற வகையில் தான் கண்ட காட்சியை அவரும் சொன்னார். 

கூட்டம் அளவற்ற திகைப்பில் ஆழ்ந்தது.
ஒருசில நாட்கள் முன்பு...
குருவாயூர் சன்னிதியில் நாராயணீயத்தைப் பிரவசனம் செய்து கொண்டிருந்தார் பட்டதிரி. 

பக்தர்கள் அந்தக் கவிச்சுவை நிறைந்த சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைக் கேட்டுப் பரவசமடைந்தார்கள். அன்றைய பிரவசனம் முடிந்ததும் பட்டதிரி வீட்டிற்குப் புறப்பட்டார். 
அப்போது அவர் அருகே பவ்வியமாய் வந்து நின்றார் பூந்தானம். பட்டதிரி விழிகளில் ஏளனம். 

""என்ன பூந்தானம்? என் நாராயணீயத்தைக் கேட்க வந்தாயா? உனக்கு அதெல்லாம் எங்கே புரியப் போகிறது?

 படித்தவர்களுக்கான நூல் அல்லவா அது?'' ""புரிந்தால் என்ன, புரியாவிட்டால் என்ன சுவாமி? குருவாயூரப்பன் புகழைச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு என் காதெல்லாம் தித்திக்கிறது. நான் தங்களிடம் ஆன்மிக விஷயமாக ஒரு சந்தேகம் கேட்கவே இன்று காத்திருந்தேன்!'' என்ன சந்தேகம்? கேள்! எதுவானாலும் நான் விளக்கம் தருகிறேன்!

""சுவாமி! நான் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானம் செய்கிறேன். சிலநேரம் அவனது மயில் பீலி அசைவது மனக் கண்ணில் தெரிகிறது. சிற்சில நேரம் அவனது புல்லாங்குழலின் காட்சி கிட்டுகிறது. 

அவனுடைய அருள்பொங்கும் தாமரைக் கண்களை ஒருநாள் மனக்கண்ணால் பார்த்து உருகினேன். ஆனால், சுவாமி, என்னவோ, அவனது முழு உருவையும் சேர்த்துப் பார்க்கும் பாக்கியம் மட்டும் கிட்டுவதில்லை.

 என் கண்ணனை முழு உருவிலும் பார்க்க வேண்டுமானால் என்ன வடிவத்தில் அவனைத் தியானம் செய்வது நல்லது? தாங்கள் தான் அறிவுறுத்த வேண்டும்!''
குழந்தைபோல் வெகுளியாக பூந்தானம் கேட்ட கேள்வியைப் பட்டதிரி உள்வாங்கிக் கொண்டார். 

குருவாயூரப்பனை முழு உருவில் தரிசிக்க விரும்புகிறானாமே படிப்பறிவில்லாத இந்தப் பாமரன்! இவனுக்கு என்ன உருவில் தியானம் செய் என்று நான் அறிவுறுத்துவது? இவனுக்கு பக்தி எதற்கு? கல்வியறிவற்ற இவனைப் போன்றவர்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு!'' இப்படி நினைத்தார் பட்டதிரி. 
கண்ணனே மாடு மேய்த்தவன் தான் என்பதும் மாடுமேய்த்த கண்ணன் தான் பண்டிதர்கள் போற்றும் கீதையை உரைத்தவன் என்பதும் அந்த நேரத்தில் அவருக்கு மறந்து போயிற்று. நகைத்தவாறே அவர் பூந்தானத்திடம் சொன்னார்.

""முழு உருவையும் தரிசிக்க வேண்டுமானால் உனக்கு அதிகம் பழக்கமான உருவில் குருவாயூரப்பனை தியானம் செய்யேன்! எருமை மாட்டு வடிவில் கூடக் கண்ணனை நீ தியானம் செய்யலாம்''. அலட்சியமாக இப்படிச் சொல்லிவிட்டு பட்டதிரி சென்றார்.

 ஆனால் பூந்தானம் பட்டதிரியின் மேல் அளவற்ற மரியாதை கொண்டவராயிற்றே? தன்னைக் கிண்டல் செய்யும் விதத்தில் தான் பட்டதிரி அப்படிச் சொன்னார் என்ற உண்மை பூந்தானத்திற்கு உறைக்கவில்லை. 

அவர் பட்டதிரியின் வாக்கை வேதவாக்காக ஏற்றார். அன்று தொட்டுக் கண்ணனை எருமை மாட்டு வடிவில் தியானம் செய்யலானார். 

கண்ணனுக்கு அளவற்ற ஆனந்தம். இருக்காதா பின்னே! அவன் எடுத்த பத்து அவதாரங்களில் மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவுமெல்லாம் உருக் கொண்டானே தவிர எருமை மாடாக உருக் கொள்ள சந்தர்ப்பமே நேரவில்லையே!

 எருமை மாடும் அவன் சிருஷ்டியில் ஒன்று தானே! இதோ! ஓர் அபூர்வ வாய்ப்பு... தவற விடக் கூடாது இதை!
பூந்தானத்தின் மனத்தில், சேற்றைப் பூசிக் கொண்டும் கொம்புகளை அசைத்துக் கொண்டும் வாலைச் சுழற்றிக் கொண்டும் கம்பீரமான எருமை மாடாகக் காட்சி தரலானான் கண்ணபிரான். ருக்மிணியும் சத்யபாமாவும் வேறுவழியின்றி அவசர அவசரமாக பெண் எருமைகளானார்கள்! 

சேற்றிலும் சகதியிலும் கண்ணன் தன் சகதர்மிணிகளோடு ஆனந்தமாக விளையாடுவதை மனக் கண்ணால் கண்ட பூந்தானம் மெய்மறந்தார். எருமை வடிவில் கண்ணனை தரிசித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

உற்சவ மூர்த்தி நடைதாண்டி வெளியே வர இயலாமல் எது தடுக்கிறது? காரணம் தெரியாமல் பல்லக்குத் தூக்கியவர்கள் தவித்தபோது பூந்தானம் உரத்துக் குரல் கொடுத்தார். கொஞ்சம் சாய்த்துப் பல்லக்கை எடுங்கள். மேலே எருமை மாட்டின் வாலாலோ, உடலாலோ எந்தப் பிரச்னையுமில்லை. கொம்புதான் முட்டுகிறது. அதனால் தான் உற்சவ விக்ரகம் வெளியே வர இயலாதிருக்கிறது. சாய்த்து எடுத்தால் வெளியே கொண்டுவந்து விடலாம்!

""இதென்ன பைத்தியக்காரத் தனமான பேச்சு! மயில் பீலியும் புல்லாங்குழலும் காதில் குண்டலங்களும் தலையில் மணி மகுடமுமாய் என்னப்பன் குருவாயூரப்பன் பல்லக்கில் எழிலோவியமாகக் காட்சி தருகிறான்! பூந்தானம் எருமை மாட்டை வர்ணிக்கிறாரே!'' 

பட்டதிரி நகைத்தபோது மூல விக்ரகத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஓடோடி வந்தார். உற்சவ விக்கிரகத்தைப் பார்த்துப் படபடவெனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். பிறகு சொல்லலானார்.

""அன்பர்களே! நான் அர்ச்சனை செய்துகொண்டே இருந்தபோது குருவாயூரப்பனின் மூல விக்ரகம் திடீரென ஒரு மகிஷமாக (எருமை) மாறியது. 

தன் எருமைக் குரலில் ""என் பக்தன் பூந்தானம் என்னை, நாராயண பட்டதிரி சொன்ன அறிவுரைப்படி, எருமை வடிவில் தியானம் செய்கிறான். அதனால் தான் உனக்கு இந்தக் காட்சி கிட்டியிருக்கிறது. உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்பவர்களிடம் இதைத் தெரிவி என எனக்கு உத்தரவிட்டார்!

 பூந்தானம் சாதாரண பக்தரல்ல. அவர் கடவுளைக் கண்ட மகான்!''
அர்ச்சகர் பூந்தானத்தின் கால்களில் கண்ணீர் பெருக விழுந்து வணங்கினார்.

 இதொன்றையும் கவனியாத பூந்தானம், ஒரே ஒரு கொம்புதான் மேலே இடிக்கிறது. இன்னொரு கொம்பு இடிக்கவில்லை. விரைவில் உற்சவ மூர்த்தியை வெளியே கொண்டு வாருங்கள்!'' என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்! 

அவர் சொன்னபடியே சாய்த்து எடுத்துவந்தவுடன் பல்லக்கு எளிதாக வெளியே வந்துவிட்டது.மறுகணம் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எல்லோரும் கேட்கும் வகையில் உற்சவ விக்கிரகத்திலிருந்து "ம்மா!' என்ற எருமை மாட்டின் கம்பீரக் குரல் எழுந்து அந்தப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது! 

எருமை மாட்டு வடிவில் கண்ணனைக் காணாவிட்டாலும் அந்த சப்தத்தைக் கேட்ட பட்டதிரி மெய்சிலிர்த்தார். 

கண்களில் கண்ணீருடன் உற்சவ மூர்த்தியை வணங்கியவர், தான் சொன்னதை மனப்பூர்வமாக ஏற்று எருமை வடிவில் கண்ணனைக் கண்ட மகான் பூந்தானத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். 

""படிப்பால் என்ன பயன்! பக்தியல்லவா முக்கியம்! ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டதற்காக பகவான் காட்சி கிடைத்துவிடுமா என்ன! உள்ளார்ந்த பக்திக்கல்லவோ என் கண்ணன் உருகுவான்! பஞ்சாங்கத்தில் என்றைக்கு மழைவரும் என்று போட்டிருக்கும். ஆனால், பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராதே! நான் படிப்பறிவுள்ள பஞ்சாங்கம் மட்டும்தான். பூந்தானமே! நீரல்வோ கண்ணனை நீராட்டிய பக்தி மழை!''

பட்டதிரியின் உருக்கமான பேச்சை பூந்தானம் கவனித்தாய்த் தெரியவில்லை. ""ஆகா! என் குருவாயூரப்பன் என்ன அழகாக வாலை அசைக்கிறார்! என மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்...
படித்ததில் பிடித்தது

Comments

Popular posts from this blog

Applications Open for Nithyapadi Thiruvarathanam Sponsors 🙏

🔹 Just one month of seva – once a year Daily two-time Aradhanam will be performed in all 6 sanctums of Sri Kannapiran Temple. 🔆 *Regular Weekly Services*   _Fridays – Thayar Tirumanjanam (Abhishekam)_   _Saturdays – Anjaneyar Tirumanjanam & Evening Thiruppavai Goshti_  🌟 *Monthly Star Abhishekams*   _Rohini – Rajagopala Swami_   _Uthiram – Mahalakshmi_   _Thiruvonam – Lakshmi Hayagreevar_   _Moolam – Anjaneyar_   _Sankatahara Chaturthi – Vijaya Ganapathi Tirumanjanam_  🙏 *Special Blessings for Sponsors*  ✔ *_Archana & Sankalpam in your name during every Tirumanjanam_* ✔ *Temple Prasadam will be sent during the annual Uriyadi festival & Homams*  👉 One month of offering… brings divine grace throughout the year! 📿 *Those who uphold Kannapiran*… *Kannapiran will uphold their family for a lifetime*. 📌 *For more details, contact*: 📞 9500264545 / 9942604383 / 8056901601 📌 ...

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...