Skip to main content

ஸ்ரீ கிருஷ்ண கவசம் - கவிஞர் கண்ணதாசன்


*கண்ணதாசனின் "ஸ்ரீ கிருஷ்ண கவசம்' என்ற சிறிய புத்தகத்தில் உள்ளபடி:*
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று இப்புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்

அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் பரமாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே !
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம் !
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே

தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளையவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!

பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க

கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக ! துணையே தருக !
மாதர் கற்பும் மடவார் நோன்பும்
மாயோன் காக்க மலைபோல் வருக !
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட

திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசை இலதாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத் 
தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்ம சந்யாசக்களமே வருக !
ஞானம் யோகம் நல்குவன் வருக !
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !

அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
மதுசூதனனே மனிதன் சரணம் !
இருடீ கேச இயலான் சரணம் !

கீதா சாரிய கிருஷ்ணா சரணம் !
வேதா சாரிய வேந்தே சரணம் !
தேவகி மைந்தா சிறியேன் சரணம் !
யசோதா குமரா அடியேன் சரணம் !
உன்னை விட்டொரு உறவுகளில்லை
என்னை விட்டொரு இனியவனில்லை
நம்மை விட்டொரு நண்பர்களில்லை
நன்மையில் உன்போல் நாயகனில்லை

எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,
அங்கங்கே நீ அருள் செய வருக !
கோசலை ஈன்ற குமரா வருக !
கோதையின் மாலை கொண்டவன் வருக !
ரகுவம்சத்தின் நாயகன் வருக !
யதுவம்சத்தின் யாதவன் வருக !
மதுவை வென்ற மாதவன் வருக !
மலைக்குடி கொண்ட மாலவன் வருக !

திருப்பதி யாளும் திருமால் வருக !
திருவரங்கத்துப் பெருமாள் வருக !
இராவணன் கொடுமை தீர்த்தாய் ; எமக்கும் இன்னருள் புரிக !
கம்சன் கொடுமை களைந்தோய் வருக !
காலனை வெல்லக் கைவலி தருக !
நெற்றியில் திருமண், நெஞ்சில் வைரம்,
காதில் குண்டலம், கையில் வில்லொடு

தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக !
கௌரவர் தம்மை களத்தில் வென்றாய்
கெளரவம் காக்க கண்ணா வருக !
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக !
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவனே நீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையேயன்று !

உன்னால் தானே உலகம் இயக்கம் !
கண்ணனிலாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளுமில்லை 
கண்ணனிலாமல் கவிதையுமில்லை
கண்ணனிலாமல் காலமுமில்லை 
கண்ணனிலாவிடில் காற்றே இல்லை !
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்

சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு !
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியுமில்லாமல்
தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக்காமல்

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினாறிளமை வழங்கு !
இப்பணி தொடர அற்புதம் காட்டு !
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போலிருந்து சாதம் ஊட்டு !
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !

உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை யசைக்க
பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவென காசுகள் சேர
தளதள தளவென தர்மம் தழைக்க

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம் !
அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் !
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் ! 
வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் 
அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் 
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...
ஜெயஜெய ஜெயஜெய 
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய 
ஜெயஜெய ஜெயஜெய...

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...