Wednesday 18 May 2016

நூல்களை அறுத்தெறிந்த கண்ணன்"


ஒரு பிராமண ஐயர் ,,,தினமும் வீதி வழியாக கிருஷ்ண பஜகோவிந்தம் 11வது பாவத்தை பாடியபடியே வீடு வீடாக சென்று அன்ன யாசகம் பெற்று உண்பவர் ,
ஒரு நாள் இப்படி வீதி வழியாக அவர் பாடி கொண்டு வரும்போது 10 வயது சிறுமி ஒருத்தி அந்த ஐயரை அழைத்தாள்,,,”சுவாமி என் வீட்டுக்கு வருகிறீர்களா உங்களுக்கு அன்னமிட காத்திருக்கிறேன்” என்றாள்,
ஐயர் அந்த சிறுமியை உற்று பார்த்தார் ,
அவள் கிழிந்த ஆடையை நேர்த்தியாய் பெயர்த்து அழகாக உடுத்தி இருந்தாள் ஏழ்மையிலும் பால் மனம் கொண்ட அழகான முகம் ,
ஐயர்–“யாரம்மா நீ என்னை குறிப்பாக உன் வீட்டிற்கு அழைத்து அன்னமிட காரணம் என்ன என்று சொல்லம்மா” என்று அன்புடன் கேட்டார் ,
சிறுமி –“சுவாமி நான் தினமும் உங்களது கிருஷ்ண பஜனை பாடல்களை ரசித்து கேட்பேன் ,,இப்படி அனுதினமும் கேட்டு கேட்டு எனக்கு தாங்கள் பாடிய முழு பாடலும் மனபாடம் ஆயிற்று ,,அதனால் உங்களை குருவாக நினைத்து என் இல்லத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள் சுவாமி” என்றாள் பணிவன்புடன்.
அவளது பேச்சில் இருக்கும் அன்புக்கு கட்டுப்பட்டு அந்த சிறுமியின் இல்லத்திற்கு சென்றார் ஐயர் ,,,,(சின்ன குடிசை ,,,மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்கள் ,
அந்த சிறுமியின் தாயும் தந்தையும் நெசவாளர்கள் அந்த நேரம் அவர்கள் சந்தைக்கு சென்றிருந்தார்கள் .
இந்த சிறுமியும் தனக்கு ஒரு சிறிய நெசவு இயந்திரத்தை வைத்திருந்தாள்),
ஐயர் சிறுமியின் இல்லத்திற்கு நுழைந்ததும் அவரது பாதங்களுக்கு நீர் வார்த்து கழுவி பூக்களால் பூஜை செய்து பின் தான் சாப்பிட வைத்திருந்த பழமும்,,பாலும் உண்ணக் கொடுத்தாள் அந்த சிறுமி ,
அவளது அன்பான விருந்தோம்பலில் ஆனந்தமாக உணவருந்திய ஐயர் ,
பின் அவளது நெசவு இயந்திரத்தின் அருகே சிக்கலான நூல்கள் அறுந்து ஆங்காங்கே கிடப்பதை பார்த்து ,,”அம்மா ,,,சுத்தமான இந்த வீட்டில் எதற்கு இந்த சிக்கலான நூல்களை எல்லாம் குப்பை போல் வைத்து உள்ளீர்கள்” என்று கேட்க
சிறுமி –“ஐயோ சாமி அது குப்பை இல்லை எல்லாம் கண்ணன் தன பிஞ்சு கைகளால் அறுத்து அறுத்து எறிந்த நூல்கள்” .
ஐயர் திகைப்புடன் “என்னம்மா சொல்கிறாய் கண்ணன் அறுத்த நூல்களா”?
சிறுமி —“ஆமாம் சுவாமி நான் தினமும் நீங்கள் பாடிய கிருஷ்ண கீர்த்தனையை பாடி கொண்டே ராட்டினம் சுற்றுவேன் அப்பொழுது கண்ணன் சிறு குழந்தையாக இங்கு வருவான் நான் சொல்ல சொல்ல கேட்காமல் என் பாட்டை ரசித்த படியே இந்த நூலை அறுத்து அறுத்து எறிவான் பின் மறைந்து விடுவான்” ,
இதை கேட்டதும் ஐயர் திகைத்து ‘இத்தனை நாள் நான் பாடிய பாடலுக்கு வராத கண்ணன் ,,,,நான் பாடி கேட்டு மனபாடம் செய்த இந்த சிறுமி பாடியா வந்திருப்பான் ,,,,,சரி பார்த்து விடுவோம் ,அதையும் ‘
ஐயர் அந்த சிறுமியை பார்த்து “அம்மா இப்பொழுது நீ பாடி கொண்டே ராட்டினம் சுற்று கண்ணன் வருகிறான என்று பார்கிறேன்” என்றார் ,
சிறுமியும் பாடி கொண்டே ராட்டினம் சுற்றினாள்,,,,சிறிது நொடியில் ,,,,சந்தோசமாக கத்தினாள் “சுவாமி கண்ணன் வந்து விட்டான்” என்று
ஐயர் —-“எங்கே என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லையே” என்றார் ,
சிறுமி உடனே கண்ணனிடம் “கண்ணா என் குரு நாதருக்கு ஏன் நீ தெரியல” என்றாள் ,
கண்ணன் -“உன் குருநாதர் தன வயிற்று பிழைப்புக்காக மட்டுமே எனது கீர்த்தனைகளை பாடுகிறார் ,,,,அதில் ,,பக்தி,பாவம் ,,உள்ளன்பு ,,எதுவுமே கிடையாது ,,,,அதனால் அவர் கண்ணுக்கு தெரியவே மாட்டேன் “என்றான் கண்ணன் ,
கண்ணன் சொன்னதை அப்படியே சிறுமி தன குருநாதரிடம் சொன்னாள்,
அதற்கு ஐயர் “நான் உன் குரு தானே எப்படியாவது எனக்கு கண்ணனை காண செய்யேன்” என்றார் ,கெஞ்சலாக சிறுமியிடம் ,
குரு சொன்னதை கேட்ட மாய கண்ணன் ,,,,,சிறுமியிடம் “தோழியே நீ பாடு உன் பாடலில் நான் ஆடிக்கொண்டே நூல்களை அறுத்து எறிவேன் ,,நூல்கள் அறுவது மட்டும் அவர் கண்களுக்கு தெரியும் படி செய்கிறேன் அதை பார்த்து அவரை மகிழ சொல். இதுவும் நீ அன்பாக கேட்டதால் தான் செய்கிறேன் ,,ம்ம் நீ பாடு” என்றான் கண்ணன் ,
சிறுமியும் கண்ணன் சொன்னதை குருவிடம் சொன்னாள்.
அவரும் “சரி நீ பாடம்மா இந்த பாவி அதையாவது பார்த்து புண்ணியம் தேடி கொள்கிறேன்” என்றார் ,
சிறுமி பாட ஆரம்பித்தவுடன், நூல்கள் தானாக அறுந்து விழுவதை பார்த்தார் ஐயர் ,,,,அப்படியே பரவசமாகி தான் செய்த தவறுக்கு கண்ணனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சிறுமியை வாழ்த்தி ,வீதியில் இறங்கி பாடி கொண்டே சென்றார்
இப்பொழுது அவரது கைகள் யாசகம் கேட்கவில்லை
பக்திக்கு மட்டுமே கட்டுப்படுவான் கண்ணன் .
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல்


பலராமரும் கிருஷ்ணரும் குழந்தைகளாக இருந்தபோது, ஒருநாள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லாச் சிறுவர்களும் ஒன்றுகூடி அன்னை யசோதையிடம் வந்து, கிருஷ்ணர் மண்ணைத் திண்றுவிட்டதாக புகார் செய்தனர். இதைக்கேட்ட யசோதை, கிருஷ்ணரது வாயைத் திறக்குமாறு கூறினாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் அன்னையான யசோதை அவ்வாறு பணித்தவுடன், அவர் ஒரு சாதாரண சிறுவன் செய்வதுபோல் தன் திருவாயைத் திறந்தார்.
அப்போது அன்னை யசோதை, தன் மகனின் திருவாயினுள் படைப்பின் முழுச்சிறப்பையும் கண்டாள். எல்லா திசைகளிலும் விரிந்திருந்த விண்வெளி, மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், கிரகங்கள், காற்று, நெருப்பு, சந்திரன், நட்சத்திரங்கள், முழுப் படைப்பின் பல்வேறான வடிவங்கங்கள் மற்றும் பிரபஞ்சப் படைப்புக்குத் தேவையான எல்லாம் தன் குழந்தையின் வாயினுள் இருப்பதைக் கண்டாள். அத்துடன் யசோதை கிருஷ்ணரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவருக்குப் பாலூட்டுவதையும் அந்த வாயினுள் கண்டு வியந்தாள். பகவானுடைய கிருபையால் மீண்டும் பழைய நிலையை அடைந்து தன் அன்புக் குழந்தையை தழுவிக்கொண்டாள்.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

கண்ணனின் திருவிளையாடல்கள்

கண்ணன் மீதும் கீதையின்மீதும் அளவிலா அன்பும் மரியாதையும் பக்தியும் கொண்ட தேவேந்திர பண்டிட் என்பவர் மிகவும் வறுமையில் வாடினார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தனது மனம் வெறுத்த நிலையில் ஒருநாள் தான் படித்துக் கொண்டிருந்த கீதையை எழுத்தாணியால் குத்திக் கிழித்தார்.
வெறுப்போடு வீட்டைவிட்டு அகன்ற சிறிது நேரம் கழித்து அவரது வீட்டின் முன் அரிசி, காய்கறி முதலான சாமான்களோடு வண்டி ஒன்று வந்து நின்றது. அந்த வண்டியில் வந்த சிறுவன் தேவேந்திரரின் மனைவியை அழைத்து, ‘இவை அனைத்தும் உங்களுக்கே!’ என்றான். பெற்றுக்கொண்ட அம்மையார் அச்சிறுவனிடம் அம்மையார் பெரிதும் அன்பு காட்டினார்.

‘நீங்கள் என்மீது அன்பு காட்டுகிறீர்கள். ஆனால் உங்கள் கணவர் என் நாக்கை குத்திக் கிழித்து விட்டார்!’ என்று சிறுவன் தனது நாக்கினைக் காட்ட அங்கே நாக்கு புண்பட்டு ரத்தம் சிவப்பாக வழிந்து கொண்டிருந்தது. சிறுவனின் நாக்கில் தேனையும் நெய்யையும் தடவிக் குணப்படுத்த முயன்றார் அந்த அம்மையார். சிறிது நேரத்தில் சிறுவன் அங்கிருந்து சென்று விட்டான்.

வீடு திரும்பிய தேவேந்திரரிடம் நடந்தவற்றைக் கூறினார் அந்த அம்மையார். நடந்தவை அனைத்தும் கண்ணனின் திருவிளையாடலே என்பதை உணர்ந்தார் தேவேந்திரர். கீதையை குத்திக் கிழித்த தம் செயலுக்கு மிகவும் வருந்தினார் அவர். அன்றுமுதல் கண்ணன்மேல் தீவிரமாகக் காதல் கொண்டார்.

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"