Friday 30 November 2018

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா?
இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது!

(ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்!
திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி!
சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!)

வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி....

டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்!

பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா?

பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க!
இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!!

--------------
மீண்டும் டொக் டொக் டொக்! - இன்னொருவர் தட்டுகிறார்!

பேய்: ஐயா, என் பெயர் பேயோன்; நான் மயிலையில் இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக்கறேனே!

பொய்கை: எனக்கு உரிமை இல்லாத இடத்தில், இவங்க ஒவ்வொருத்தரையும் வாங்க-ன்னு கூப்புடுறேனே! இது என்ன விந்தை!
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! மூவர் நிற்கலாம்!!!

மூவரும் நின்று கொண்டே, பேசிப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்! ட்விட்டரில் நாம் கழிப்பதைப் போலவே :)


திடீரென்று...கும்மிருட்டில்...மூவருக்கும் மூச்சு முட்டுது!
மூவர் நிற்கும் இடத்தில், இப்போ நாலாவதா யாரோ பிடிச்சி நெருக்கறாங்க! அப்பறம் விட்டுடறாங்க! மறுபடியும் நெருக்கறாங்க....
அச்சோ.....இப்படிப் போட்டு நெருக்கினா எப்படி? வலிக்குதே!! - கள்வனோ?


யாருப்பா இந்த அறிவு கெட்ட திருடன்? ஒன்னுமே இல்லாத அன்னாடங் காய்ச்சிகள் கிட்டயா திருட வருவான்?
வந்தது தான் வந்தான்! இப்படியா சத்தம் போடாமல் வருவது? ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே! கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே! ஓசையும் இல்லை! ஒளியும் இல்லை!

பேய்: இல்லை! இது மனித வாசனையே இல்ல! விலங்கும் இல்ல! விளக்கு இருந்தாலாச்சும் யாருன்னு பார்க்கலாம்! இந்த நள்ளிரவில் யாரிடம் போய் விளக்கு கேட்பது?
(உம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க! ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே! என்ன செய்ய :)

பூதம்: உம்ம்! அகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை!

பொய்கை: "இல்லை இல்லை" என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது?
ஆனால்........எதுவும் எனது இல்லை, எனது இல்லை! - இந்த "இல்லை"-யை வைத்துக் கொண்டு விளக்கு ஏற்ற முடியுமே!

எனது இல்லை, எனது இல்லை!
= எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது! என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ...ஏதோ ஒன்றுக்காக கொடுக்கப்பட்டது!

யாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா? பொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது! செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க!
= இப்படி எல்லாமே.....கிடைச்சதும் அடைஞ்சதும் தானே?

இப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்தை உச்சரிக்கிறார்!
அவருக்கு நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல! - அதனால் "வையம்" என்றே துவங்குகிறார்

தமிழ் இலக்கியங்கள் பலவும் "உலகம்" என்னும் முதற் பொருள் வைத்தே தொடங்குவது போல்...ஆதி பகவன் முதற்றே "உலகு" என்பது போல்....
வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, அருளிச்செயல் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!
உலகம், கடல், ஞாயிறு போற்றுதும்-ன்னு சிலப்பதிகாரம் போலவே துவங்குது!

வையம்=தகளியா, வார்கடலே=நெய்யாக
வெய்ய கதிரோன்=விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!

உலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,
காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...
சக்கரம் ஏந்தியவன் திருவடிக்கு, தமிழ்ச் சொல்மாலை சூட்டினேன்!
மனித குலத்தின் "இடர்" எனும் இருள் நீங்காதா?

முதல் விளக்கு ஏற்றியாகி விட்டது! ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே! விளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தார்!

அன்பே=தகளியா ஆர்வமே=நெய்யாக
இன்புருகு சிந்தை=இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்!

அன்பை அகல் ஆக்கினேன், ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,
(வேதம், படிப்பு-ன்னுல்லாம் வரைமுறை இல்லாமல், "ஆர்வம்" என்பதே ஆதாரம்)
அவனை உருகி மகிழும் சிந்தனைத் திரி ஆக்கினேன்...
அதில் விளக்கு ஏற்றினேன்! நாராணன் என்பானுக்கு ஞானத் தமிழைச் சொன்னேனே!

* உலகத்தை ஒரு விளக்காகவும்,
* அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்கணும்?
முதல் விளக்கு = புற இருள் அகற்ற = அதான் உலகம்/சூரியன்!
இரண்டாம் விளக்கு = அக இருள் அகற்ற = அதான் அன்பு/சிந்தனை!!

இறைவன் தெரிய வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகளும் ஏற்ற வேணும்!
லட்சம் லட்சமாய்ச் செலவழிச்சி, லட்ச தீபம் ஏற்றினாலும் தெரியாதவன்....
இந்த இரண்டு விளக்குக்கும் தெரிவான்!
இதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு ஒளி காட்டினார்கள்!

இப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று! ஆகா...பெருந் திருடன்! அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது???
பொய்கை-பூதம் ஏற்றிய விளக்கின் ஒளியிலே, பேயார் அந்தக் கள்வனைக் கண்டு விடுகிறார்!

திருக்கண்டேன்! பொன்மேனி கண்டேன்! திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்! - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்! புரிசங்கம் கைக்கண்டேன்!
என்னாழி வண்ணன்பால் இன்று!!

விளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார்?
கடவுளா? இல்லை! - ஒரு பெண்!
ஆமாம்! கள்வனின் காதலி, அவன் மார்பிலே இருக்கிறாள்! = திருக் கண்டேன்!

பொன்மேனி கண்டேன்! - அட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன?
பொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே! பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு அசைத்து......என்பதல்லவா பாட்டு!

பெருமாள் நீல மேனியன் ஆயிற்றே! "நீலமேனி கண்டேன்"னு தானே சொல்லணும்? பொன்மேனி கண்டேன் = ஏன் இந்தப் பொய்?
இவரு நெசமாலுமே இறைவனைக் கண்டரா? இல்லை சும்மானா வர்ணனையா? மெய் விளக்க வந்த பொய் விளக்கோ தமிழ்ப் பாசுரங்கள்???

நீலமேகக் கல்-னு ஒரு இரத்தினக் கல் இருக்கு! அது உண்மையான கல்லா-ன்னு எப்படிச் சோதனை செய்வது?
அதை பாலில் போடணும்! போட்டா, முழுப் பாலும் அப்படியே, சொட்டு நீலம் கணக்கா..... நீலமா மாறிடும்!

அதே போல், திருமகள் விலை மதிப்பில்லா பொன் "மணி"! பெண் "மணி"! - அவள் நிறமும் அப்படியே!

அன்பர்கள் எல்லாம் இறைவனைச் சேவிக்க வருகிறார்கள்!
அவர்கள் தொலைவில் வரும் போதே, அவர்களை இவள் பார்த்து விடுகிறாள். தன் குழந்தையின் வருகையைத் தெருக்கோடியிலேயே காணும் ஒரு தாய் போல, அவன் திருமார்பில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கிறாள்!

கைத்தாங்கலாக, அவன் மார்பிலும் கை வைக்க...எட்டிப் பார்க்க...
அவள் தீண்டிய அடுத்த நிமிடம்....
அந்தக் கருப்பனும் வெளுப்பன் ஆகி விட்டான்!

நீலமேகக் கல் பட்டவுடன், பால் நீலமானதைப் போல், நீலமேனியாய் இருந்தவன், அவள் தீண்டல் பட்டு, மின்ன ஆரம்பித்து விட்டான்!

அதான், திருக் கண்டேன்-னு அன்னையை முதலில் பார்த்த ஆழ்வார், அடுத்து பொன்மேனி கண்டேன்-னு சொல்லிட்டார்!

பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்! - பொருட் செல்வம் தரும் அவள், அவனையும் ஒரு பொருளாகச் செய்து விட்டாள்!
இப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலரு போய், நல்லா செவ செவன்னு, மனைவியின் கலரு ஆயிட்டான் ! :)


அருக்கண் "அணி" நிறமும் கண்டேன்-னு உண்மையைப் போட்டு உடைக்கறாரு! அருக்கண்-அருக்காணி:))

அவன் கையில் பொன்னாழி என்னும் சக்கரம் கண்டேன்!
புரிசங்கம் என்னும் வலம்புரிச் சங்கு கண்டேன்!
என் ஆழிவண்ணன் பால் இன்று! - என்று பாடி முடிக்கிறார்! அவன் "ஆழி வண்ணன்" தான் என்று இறுதியில் சொல்லி, "பொன்மேனி" கண்டேன் என்று தான் முதலில் சொன்னது அவளையே என்றும் காட்டுகிறார்!

இப்படி மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!
இடைகழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!

கருடன் பகவான் தகவல்கள்.



பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.
1. ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

3. ‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

4. காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.

7. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி - பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.

9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.

12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.

13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

14. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.

17. குப்தர்காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.

18. சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.

19. உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.

20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.

22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.

25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது.

26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள். இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.

29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி.

31. கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.

32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.

33. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!

34. கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!

35. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.

37. கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

38. எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.

39. கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.

40. நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.

41. எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.

42. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.

43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.

45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.

46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.

47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.

48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.

49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.

50. சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்.

51. ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.

52. வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது.

53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.

54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.

55. கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது.

56. திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.

57. கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம்.

58. கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.

59. ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.

60. பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.

61. கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன்.

62. கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.

63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.

64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு.

65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.

67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும்.

68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.

69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

70. ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு.

71. கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும்.

72. வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும்.

73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.

74. கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.

75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.

76. தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.
77. ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.

78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.

80. கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.

81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.

82. பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.

83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.

84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.

85. அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.

86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.

89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.

90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா!

ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

Saturday 24 November 2018

இந்து_தர்ம_சாஸ்திரம்



1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

(Shared from whatsapp group)

Thursday 22 November 2018

எங்கும் நிறைந்த திருமால்


எங்கும் நிறைந்தவன் திருமால். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலே காவேரி நதி சூழ திருவரங்கம் என்னும் கோவிலில் குடி கொண்டுள்ளான். அவன் அரங்கன் என்று அழைக்கப்படுகிறான். அவனே பற்றற்ற அடியவர்களை வணங்கும் வகையில் வேங்கட மலையில் குடி கொண்டுள்ளான், மேலும் ,

" பள்ளி ஆவது பாற்கடல் அரங்
      கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை
      பிரான்-அவன் பெருகும் இடம்-
வெள்ளியான் கரியான் மணி நிற
      வண்ணன் என்று எண்ணி நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே "

-பெரிய திருமொழி.

என்று பாடுவதன் மூலம், திருமால் வெண்மையாகவும், கருமையாகவும், நீலவண்ணத்திலும் , பச்சை வண்ணத்திலும் காட்சி தருகின்றான் என்பதை நாம் அறிய முடிகிறது. கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள் கதறும்படியாக (அவளது) முலையை சிறு குழந்தையாயிருக்கச் செய்தே உயிருடன் உறிஞ்சி அமுதுசெய்த ஸ்ரீக்ருஷ்ணபகவான் பள்ளி கொள்ளுமிடமாவது திருப்பாற்கடலும் திருவரங்கமுமாம்; அப்பெருமானே (கிருதயுகத்தில்) வெளுத்த நிறத்தனாயும் (கலியுகத்தில்) கறுத்த நிறத்தனாயும் (த்வாபரயு கதில்) சாமநிறத்தனா யுமிருப்பவன் என்று தியானித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் வணங்கப்பெற்றதாயு முள்ள திருமலையிலே அருள்கிறான், அவனை அடை நெஞ்சமே என்கிறார்.

ஓம் நமோ வெங்கடேசாய.



படம்:  ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்.

கார்த்திகை, கார்த்திகையில் அவதரித்தக் கலியன்” (ஸ்ரீரங்கம் முரளீபட்டர்)


நன்றி 
(ஸ்ரீரங்கம் முரளீபட்டர்)


திருப்பாணாழ்வார் உள்ளத்தினைக் கவர்ந்த கள்வனான அரங்கன், கள்வனாக மாறிய திருமங்கையாழ்வார் மனதினையும் கவருகின்றார். அரங்கன் கள்ளனுக்கெல்லாம் கள்ளன். இவரது இயற்பெயர் நீலன். கள்ளர் குலத்தவர். சோழபேரரசின் தளபதி. இவர் திருவாலி என்னும் ஊரில் குறையலூர் என்ற சிற்றூரில் ஆலி நாட்டு பெரிய நீலன் என்ற படைத்தளபதிக்கும் வல்லித்திரு எனும் நற்குண மங்கைக்கும் மகனாகப் பிறந்தார். போரில் எதிரிகளை கலங்கடித்தவர். பின்னர் சோழமன்னன் அவரை ‘திருமங்கை’ என்னும் சிற்றரசுக்கு அரசனாக்கினான். 

வீர இளைஞனான நீலன் திருவெளளக்குளம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீநிவாஸர் கோவிலில் குமுதவல்லி எனும் கபிலமுனியின் சாபத்தினால் மானுடவாழ்வெடுத்த தேவமகளை, தேவதையை, அழகு என்ற சொல்லுக்கே இலக்கியமானவளை, மஹாஞானியை பார்க்கின்றாh. தன் மனதினை பறிக்கொடுக்கின்றார். குமுதவல்லி இரண்டு கட்டளையிடுகின்றார்.

1) பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு திருமாலடியவனாய் மாறவேண்டும்.
2) அடியார்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் செய்ய வேண்டும்.
பஞ்ச சம்ஸ்காரம் யாரிடம் செய்து கொள்வது?. என்றும் உயர்ந்ததையே நாடும் நீலன் அன்று
திருநறையூர் ஸ்ரீநிவாஸனையே தேர்ந்தெடுத்தார் குருவாக. மன்னன் சித்தம் கேட்ட பட்டர் செய்வதறியாது திரைசேர்த்து வெளியேறினார். கருவறையில் ஸ்ரீநிவாஸன் எதிரே நீலன்!
பிடிவாதமாக அவர்தான் தமக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்ய வேண்டுமென்று கண்மூடி அசையாது அவரையே தியானித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம்தான் என்றாலும் கடுமையான தபஸ் அது.
மெய்யுருகி நின்றால் வெண்ணையுண்டவாயன் தான் உருக ஆரம்பித்து விடுவான். ஸ்ரீநிவாஸனின் சக்கரக்கையும் சங்கக்கையும் நீலனின் புஜங்களை தீண்டியது. நெற்றியில் ஊர்த்வபுண்டரமிட்டது. பரகாலன் என்று நாமமிட்டு அழைத்தது. திருமந்திரத்தை உபதேசித்தது. நீலனின் களை மாறியது. தேஜஸ் ஒளிர்ந்தது. புனித குமுதவல்லியுடன் திருமணம் இனிதே நடந்தது. அன்னதானம் ஆலிநாட்டில் சிறப்பானது. ஆலிநாடே அதிசயபட்டது. மன்னன் பரகாலன் புகழ் எட்டுதிசைகளிலும் பரவியது.

கப்பம் கட்டாத பரகாலனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்றறிந்த சோழமன்னன் தந்திரமாக அவனை ஒரு கோவிலில் சிறை வைத்தான். மூன்று நாட்களாக உண்ணாவிரதமிருந்த பரகாலனின் கனவில் பேரருளாளன் அத்திகிரி அருளாளப் பெருமாள் வரதன் தோன்றினான். காஞ்சிக்கு வரப் பணித்தான். கடனைத் தீர்ப்பதாக அறிவித்தான். அருளாளின் ஆணையை அரசிற்குத் தெரிவித்தார் பரகாலன். பரகாலன் சத்தியம் தவறாதவர் என்று நன்குணர்ந்த அரசன் ஒரு சிறு குழுவினை அவரோடு காஞ்சி அனுப்பி வைத்தார். மீண்டும் பரகாலன் கனவில் தோன்றிய அருளாளன் ஒரு புதையல் இருக்கும் இடத்தைக் காண்பித்துக் கொடுத்தார். வேகவதி ஆற்றங்கரையில் தோண்டினார் பரகாலன். பெரும் புதையலை கண்டெடுத்தார். அரசுக்கு செலுத்தவேண்டிய கப்பம் செலுத்தினார். மீதமானதை அன்னதானத்திற்கு எடுத்து வைத்தார். திருமங்கை விளைச்சலில் அரசுக்கு சேரவேண்டிய நெல்லைக் கேட்டனர் குழுவினர். அருளாளனின் மீது பாரத்தை போட்டுவிட்டு கண்ணை
மூடிக்கொண்டு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆற்று மணலைக் காட்டினார் பரகாலன். என்ன ஆச்சர்யம்! அவர் காட்டிய இடமெல்லாம் மணல்துகளனைத்தும் நெல்மணிகளாயின! பரகாலன் பெருமையினை, தெய்வம் துணை நின்றதையறிந்த அரசன் தவற்றுக்கு வருந்தினான். அவரை சுதந்திரமாக திருமங்கையை ஆளவிட்டார்.

நீலன் மனப்பூர்வமாக வைணவனாக உறுதி பூண்டார். திருநறையூர் நம்பி அருள் புரிந்தார் இவரின் உறுதி கண்டு!. அன்னதானத்தின் பயன் அருளாளன் வரதன் அருள்புரிந்தார்.

ஆலிநாட்டின் பொருளாதாரம் வலுவிழந்தது. வளமுள்ளவரிடத்து கொள்ளயடித்தாவது இந்த கைங்கர்யத்தைச் செய்ய துணிபு பூண்டார் பரகாலன். வழிப்பறிக் கொள்ளையனாய் மாறினார்.
வயலாளி மணவாளனும் தாயாரும் புதுமணத் தம்பதியனராய் மாறினர். இவர்களின் ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்த பரகாலனால் நம்பெருமாள் கால்விரலில் அணிந்திருந்த விரலணியை கழற்ற இயலவில்லை. பரகாலன் பல்லால் கடித்தாவது கழற்ற முயலுகின்றார். அவரின் தலை இறையின் பாதங்களில் முட்டுகின்றது. பல்லினால் கடிக்கின்றார். தீண்டிய வேகத்தில் மெய்வண்ணம் உணர்கின்றார். திருமந்திரம் மீண்டும் உபதேசித்து பேரொளியாய் மறைகின்றான் மாயவன். 

கவி பிறக்கின்றது கள்வனுக்கு!
பொய் வண்ணன் மனத்தகற்றி புலனைந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மை வண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ண மரதகத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே
பொய்கள் போன்ற பலவிதமான பாவச் செயல்களை மனதிலிருந்து நீக்கி, ஐந்து புலன்களையும் தகாத வழிகளில் போகாத வண்ணம் நிலைநிறுத்தி, ஆத்மாவுடன் சேர்ந்து முழு உள்ளத்துடன் தன்னை வணங்குபவர்களுக்கு, தனது உண்மையான குணங்கள் முழுவதும் காண்பிப்பவனை, கண் மைப் போன்ற கரிய நிறமும், கரியமேகம் போல் ஒளிவீசும் நிறமும், மரகதம் என்ற ரத்தினத்தினைப் போன்ற பச்சை நிறமும் உடைய பெரியபெருமாளை, நான் திருவரங்கத்தில் கண்டு வணங்கினேன். 

திருமங்கையாழ்வார் பரம பாக்யசாலி. பகவானால் பஞ்சசம்ஸ்காரம் செய்யப்பட்ட ஒரே வைணவர் இவர்தான்!. இவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செய்த பல கைங்கர்யங்கள் கணக்கிலடங்கா! ஆனால் இந்த கைங்கர்யத்தினை நிறைவேற்ற இவர் கையாண்ட முறை வித்யாசமானது! எது வேண்டுமானாலும் பகவத் கைங்கர்யத்திற்காக துணிவோடு செய்வார். இவர் செய்த கைங்கர்யங்களுள் சாட்சியாகயிருப்பது இவரால் கட்டப்பட்ட மதில்களும், விமான, மண்டப, கோபுரங்களும் இவர் பாடிய பாசுரங்களும்தாம். திருவரங்கம் திருச்சுற்றில் நான்காவது திருச்சுற்று ஆலிநாடன் திருச்சுற்று என்றே திருமங்கை மன்னன் திருப்பணியை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது. 

நாகப்பட்டினத்தின் அருகேயுள்ள ஒரு புத்தர் கோவிலிலுள்ள சொர்ணத்தினாலான, எளிதில் திருடவே முடியாத, ஒரு புத்தர் சிலையை வெகு சாமர்த்தியமாகக் கொள்ளையடித்தார். பயணக்கப்பல் ஒன்றில் தன் பரிவாரங்களோடு பயணமும் செய்து பொய்வழக்காடி அந்த கப்பல் முதலாளியிடமிருந்து நிறைய தனத்தினைப் பெற்றார். இவையனைத்தையும் திருப்பணிக்காக செலவழித்தும் ஊழியர்களுக்கு சம்பளபாக்கி!. அவர்களனைவரையும் ஒரு ஓடத்தில் ஏற்றினார். அக்கரைச் சேர்ந்தவுடன் தருகிறேன் என்று கூறி கொள்ளிடம் நடு ஆற்றில் ஓடத்தைக் கவிழ்த்து அவர்கள்தம் பிறவிக்கடனை இவர் கழித்தார். அவரவர் உறவினர் இவரை மடக்க, இவரது ஸ்வப்னத்தில் (இங்குமா!?), அரங்கன் எழுந்தருளி உறவினர்களளனைவரையும் காவேரி ஸ்நானம் செய்து அழகிய மணவாளன் திருமண்டபத்திலே நின்று அவரவர் உறவினர் பெயரைக் கூப்பிட்டு காத்திருக்கச் சொல்லி மறைந்தார். அவ்வாறே ஆழ்வாரும் ஏற்பாடு செய்தார். மாண்டோர் அனைவரும் மீண்டனர். அவர்களனைவரும் அவர்கள்தம் உறவினர்களிடத்து ‘ஆழ்வாருடைய நிர்ஹேதுக பரம க்ருபையுண்டானபடியினாலே நாங்கள் பெரியபெருமாள் திருவடிகளையடைந்தோம்! நீங்கள் ஆழ்வார் திருவடிகளிலே அபசாரப்படாதீர்கள். சிலகாலம் இந்த ஸம்ஸார வாழ்க்கையினைக் கழித்து விட்டு ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்!’ என்று விண்ணப்பித்து மீண்டுபோனார்கள்.

இந்த க்ஷணம் அடியேன் சிலகாலம் முன்பு என் மனதில் போட்டு வைத்திருந்த ஒரு கேள்விக்கு அரங்கன் பதிலளித்துள்ளார். ஸ்ரீரங்கம் கோவிலில் முகலாயர்கள் படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கான வைணவர்கள் இறந்தார்களே? கோவில் வளாகத்திற்குள்ளேயே இறந்து போனார்களே? அப்பொழுதெல்லாம் ஏன் அரங்கன் அவர்களைக் காப்பாற்றவில்லை? அரங்கனுக்கு அவர்களைக் காப்பாற்றக் கூடிய சக்தியில்லையா? என்றெல்லாம் தோன்றியது. என்றாவது ஒரு நாள் பதில் தருவான் என்று மனதின் ஒரு மூலையில் கிடத்திய இக்கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அரங்கனுக்குக் கைங்கர்யம் பண்ணிய அடியார்களை ஆற்றில் மூழ்கடித்தார் திருமங்கைமன்னன்.     நம் பார்வைக்கு அநியாயமாகக் கொல்லபட்ட அவர்களை அரங்கன் ஆட்கொண்டான். அவர்கள் பெரியபெருமாள் திருவடிகளடைந்ததை பிரத்யட்சமாக அழகிய மணவாளன் மண்டபத்தில் மீண்டு வந்து உணர்த்தினார்கள். 

இதை நாம் பிரமாணமாகக் கொள்ள வேண்டும்! அரங்கநகரப்பனைக் காக்கும் பொருட்டு தன் இன்னுயிர் துறந்தவர்களை சும்மாவா விடுவான் அரங்கன்? அவர்களைனைவரையும் அரங்கனே அவர்களது ஊழ்வினையறுத்து தம் திருவடிகளில் சேர்த்துக் கொண்டுள்ளார். உயிர் கூட்டினை விட்டு சாமான்யர்களின் உயிர்பறவை பிரிவதென்பது வலிதான். இவர்களனைவரும் சற்று கடுமையான வலியினைத் தாங்கியுள்ளனர். எவர் மூலமோ கொடுவாள் எடுத்து ஊழ்வினையறுத்து, அவனது நிர்ஹேதுக கிருபையினால் அவன் திருவடிகளையடைந்துள்ளனர். அவனது திருவடிகளடைந்து பரமபதம் சென்றாலும் அவர்கள் அவ்வப்போது திருவரங்கமும் வந்து சென்று அரங்கனை தரிசிக்கின்றார்கள். இதனை நான் சொல்லவில்லை. ஆழ்வாரே அறிவிக்கின்றார்! இதோ அவர் பாடல்!
ஏனமீனாமையோடு அரியும் சிறுகுறளுமாய்
தானுமாய தரணித்தலைவனிடமென்பரால்
வானும் மண்ணும் நிறையப்புகுந்து ஈண்டி வணங்கும்- நல்
தேனும் பாலும் கலந்தன்னவர்சேர் தென்னரங்கமே!
பரமபதத்தில் உள்ளவர்களும், இந்த பூமியிலுள்ளவர்களும் ஊர் முழுவதும் நிறைந்துள்ளது போல் இங்கு வந்து ஒன்றாகத் திரண்டு வணங்கும் இடமும், சுவையும் மதுரமும் உள்ள தேனும் பாலும் இரண்டற ஒன்றாகக் கலந்தது போல் இங்கு உள்ள அடியார்கள் சேர்ந்து நிற்கவும் ஆகிய திருவரங்கமானது - வராகமாகவும், மீனாகவும், ஆமையாகவும், நரசிம்மமாகவும், வாமனனாகவும் அவதாரங்கள் எடுத்துப் பின்னர் தானே ஒரு பூர்ணமான அவதாரம் எடுத்தப் பூமியின் தலைவனும், சக்ரவர்த்தித் திருமகனாம் ஆகிய இராமபிரானின் இடமாகும்.

திருமங்கையாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வாரைச் சந்தித்திருக்கிறார். திருமதிள் அமைக்கும் போது இவரது நந்தவனத்திற்கு எந்த ஊறும் ஏற்படாவண்ணம் திருமதிளை நந்தவனத்தை வளைத்துக் கட்டியுள்ளார். இதனைக் கண்டு மகிழ்ந்த தொண்டரடிப்பொடிகள் அவரை வாழ்த்தி, தான் பூக்களைப் பறிக்கும் சிறுகத்தி போன்ற ஆயுதத்திற்கு, திருமங்கைமன்னனின் மற்றொரு பெயரான ‘அருள்மாரி’ என்ற பெயரை வைத்துள்ளார்.

திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து சில வரங்களை யாசிக்கின்றார்.  அவற்றுள் சில

- தசாவதாரங்களையும் தரிசிக்க வேண்டும்
- திருமங்கைமன்னன் படித்துறைக்கு (மயானம்) எந்தவித தோஷங்களும் கூடாது. அது எப்போதும் தோஷற்றதாக விளங்க வேண்டும்.

அரங்கன் ஆழ்வாரது கோரிக்கையை சந்தோஷமாக ஏற்கின்றான். எம்பெருமானின் தசாவதாரங்களையும் பாடிக் கொண்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு அந்த அவதாரங்களை தானும் ஸேவிக்க மிகுந்த ஆசையுண்டாயிற்று. ஆழ்வார்கள் வேண்டி அரங்கன் ஏதும் மறுப்பானோ? ஆழ்வார் உய்ய, அவர் பொருட்டு நாம் உய்ய அர்ச்சாரூபமான (சிலா ரூபத்தில்) தசாவதாரங்களையும் காண்பித்தருளினான். அப்போதே திருமங்கையாழ்வார் விக்ரஹத்தையும் தோன்றச் செய்தார். இவருக்குக் காட்சியளித்த விக்ரஹங்களனைத்தையும் இன்றும் ஸ்ரீரங்கத்தில் அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ‘தசாவதார ஸந்நிதியில்’ அதிவிசேஷமாகக் காணலாம். (இத்திருக்கோவில் ஒரு காலத்தில் கோயிலண்ணன் கட்டுப்பாட்டிலிருந்ததாகவும், 18ம் பட்டம் அழகியசிங்கர் காலத்தில் கைமாறியதாகவும் சொல்லுவர்). இங்குள்ள திருமங்கையாழ்வார் விக்ரஹம்தான் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவத்தின் போது எழுந்தருளப் பண்ணியதாகவும், இந்த உற்சவம் முழுவதும் வடக்குச் சித்திரை வீதியிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்ததாகவும் சொல்லுவர். அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது இந்த ஸந்நிதியினை ஸேவிக்கத் தவறாதீர்கள்!

இக்கலியனை மிகவும் கவர்ந்த திவ்யதேசங்கள் திருநறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம், திருவேங்கடம், திருக்குடந்தை ஆகிய திவ்யக்ஷேத்திரங்களாகும். இவர் நாலுகவிப் புலவராவார். அவையாவன ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி என்பதாகும். திருவரங்கத்தில் ஆழ்வார்களின் தீந்தமிழுக்கு, திருவாய் மொழித் திருநாள் ஏற்படுத்தி, பெருவிழா எடுத்த முதல்வர் இவர்தான். திருக்குடந்தை ஆராவமுதன் குறித்து இவர் இயற்றிய ‘திருவெழுக்கூற்றிருக்கை” ஒரு அற்புத சித்ரகவியாகும். காடு, மேடு, ஆறுகள், குன்றுகள் பலவற்றைக் கடந்து எண்பதிற்கும் மேலான திவ்யதேசத்து எம்பெருமான்களைப் பற்றி பாடியுள்ளார். அதிக திவ்யக்ஷேத்திரத்து எம்பெருமான்களை பாடிய பெருமை இவரையேச் சாரும். இவரது வாழ்க்கையும், பாக்களும் மிகவும் சுவாரசியமானவை. பாசுரங்கள் காந்தம் போன்று மனதினை கவர்ந்துவிடும்.

ஏழை ஏதலன் கீழ்மகனென்று எண;ணாது 
இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கி உன் தோழி
உம்பியெம்பியென்றொழிந்தில்லை - உகந்து
தோழன் நீ எனக்கு இங்கொழியென்ற
சொற்கள் வந்து அடியேன் மனந்திருந்திட -
ஆழிவண்ண! நின்னடியினையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே!

ஞானமில்லாதவன், பகைவன், தாழ்ந்த பிறவியுடையவன் என்று சிறிதும் நினைக்காமல் மனதில் இரக்கம் கொண்டு, அதற்கும் மேலே அந்த குகனுக்கு உனது இனிய அருளையும் கொடுத்தாய். கள்ளம் கபடம் இல்லாத மானுடைய இனிமையான பார்வை போன்று கனிவான பார்வையுடைய ‘இந்த சீதை உனக்கு தோழியென்றும், என்னுடைய தம்பியான இலக்குவன் உனக்கும் தம்பியாவான்’ என்று கூறினாய். இதோடு நிற்காமல் மிகவும் உவகையுடன், ‘நீ எனக்குத் தோழன்’ என்று குகனைப் பார்த்துக் கூறினாய். உனது தம்பியான பரதன் ஆட்சி செய்யும் காலத்தில் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்க எண்ணி ‘நீ அங்கேயே இரு’ என்றாய். இவ்விதமான நீ அருளிய சொற்கள் பெரியோர்கள் மூலம் அடியேன் காதில் விழுந்து எனது மனதிலேயே தங்கிவிட்டது. கடல் போன்ற நிறமும் மனதும் உடையவனே! அழகான சோலைகளை உடைய திருவரங்கப் பெரிய பெருமாளே! உனது திருவடிகளே சரணம் என்று நான் வந்தேன். 

நம் தேகமே ஆத்மா,  ஆத்மா நம்முடையது,     நாம் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகின்றோமே அதுதான் ஒரு பெரிய களவு.    எப்போது மெய்ஞானம் தோன்றி அரங்கனிடத்து ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகின்றோமோ அன்றுதான் நமக்கு விடுதலை!

Sunday 18 November 2018

ஸ்ரீவேதவ்யாஸபட்டர்ஸ்வாமிகள்_கைசிகபுராணம்_வாசிப்பு





ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க வேண்டும். அன்றைய தினம் கைசிக ஏகாதசியன்று பட்டர் வெகு விசேஷமாக, அளவற்ற ஞானத்துடனும், ஒவ்வொரு பதத்திற்கும் இதுவரைக் கேளாத அதிவிசேஷார்த்தங்களை பிரவாகமாக உபதேசித்தருளுகின்றார்.

கூடியிருந்தோரெல்லாம் இவரது வாக்பிரவாகத்தில் கட்டுண்டு கிடந்தனர். அரங்கனின் அந்த அர்ச்சை சொரூபத்தில் கூட மார்பும் தோளும் விரிந்து பூரித்தது. தாம் சாத்தியிருந்த மாலையை கழட்டி சாதிக்கச் சொல்கின்றார். திருப்தியடையாது தம் சாத்தியிருந்த பொன்னாடையைப் போர்த்துகின்றார். அப்பவும் திருப்தியடையவில்லை. தம்முடைய திவ்ய திருவாபரணத்தினையெல்லாம் கழட்டி பட்டரை அணியச் செய்விக்கின்றார். இவ்வளவு செய்தும் அரங்கன் திருவுள்ளம் அப்போதும் திருப்தியடையவில்லை! தாம் எழுந்தருளிய ஒரு சிம்மாசனத்தினைக் கொடுத்து பட்டரை தம் எதிரே அமரச் செய்கின்றார். வேறு பல அரிய பரிசில்களை கொடுக்கின்றார். உஹூம்! அரங்கன் இதனால் எல்லாம் திருப்தியடையவேயில்லை. பட்டரும் இதனால் எல்லாம் மகிழ்ந்து பூரிக்கவுமில்லை! ‘இவர்க்கு இதெல்லாம் விட சிறந்தது எது கொடுப்போம்’ யோசிக்கின்றார். பளீரென்று சொல்கின்றார், ”பட்டரே! உமக்கு மேலே வீடு தந்தோம்” என்று இதுநாள் வரை யாரிடமும் சொல்லாத ஒரு சொல்லைச் சொல்கின்றார். இப்போது பட்டரின் மார்பும் தோளும் சந்தோஷத்தினால் பூரிக்கின்றது.

‘மஹாப்ரஸாதம்’ என்று அங்கீகரித்து அந்த சந்தோஷத்துடனே தண்டன் சமர்ப்பிக்கின்றார். க்ருதக்ஞையோடு நமஸ்கரிக்கின்றார். அரங்கனிடத்துச் சொல்கின்றார். ‘நாயன்தே! தேவரீர் அர்ஜூனனிடத்து ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று அருளிசெய்தருளினீர். ஆனால் தேவரீர் தாமே உம்முடைய திருவாயினால் என்னைத் தவிர வேறு யாருக்குமே திருவாய் மலர்ந்து அருளப்பெற்றிராத இந்த பேற்றுக்கு, உடையவர் எமக்கு தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும், எம் தந்தையான ஆழ்வானும், எம்பாருமே’ என்று விண்ணப்பம் செய்கின்றார். கூடியிருந்த வைணவர்களனைவரும் கடல் போன்று கலங்கினார்கள். ‘அரங்கன்தான் உகப்பினால் திருவாய் மலர்ந்தருளினால் நீங்கள் ஏன் அதை அங்கீகரிக்க வேணும்? உம்மைக் கொண்டு இந்த பூமியினைத் திருத்தி விடலாமென்றிருந்தோமே’ என்று கதறுகின்றார். அதற்கு பட்டர், இன்னம் சிறிது நாள் இங்கே அரங்கன் என்னை அடிமைக் கொண்டிருந்தால் பரமபதத்திற்கும் இப்புவிக்கும் ஒரு பாலமே அமைத்திருப்பேன்’ என்கின்றார். திடீரென்று ஒரு கவலைப் பிறந்தது பட்டருக்கு! அரங்கனிடத்து நிவர்த்தி செய்ய கேட்கின்றார் ” ப்ரபோ! அங்கு பரமபதத்திலே அஞ்சேல் என்ற கையும், கவித்த முடியும், புறுவல் பூத்த சிவந்த திருமுகமும், நெற்றியில் கஸ்தூரி திலகமுமாக தேவரீரை பரமபதத்திலே தரிசனம் செய்ய முடியும்தானே? நாம் காணவிட்டால் அங்குள்ள ஒரு மூலையினை முறித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திற்கே மீண்டு வருவேன்’ என்று விண்ணப்பம் செய்கின்றார். அரங்கன் எப்போதுதான் முடியாது என்று பட்டருக்குச் சொல்லியிருக்கின்றான்! ஒப்புக் கொள்ள பட்டர் மூலஸ்தானம் சென்று பெரியபெருமாளையும், உற்சவரையும் ஆபாத சூடம் அனுபவிக்கின்றார். கண்ணாரக் கண்டு ஆனந்திக்கின்றார்!.

பெருமாள் தம் பரிசகர்களனைவரையும் பட்டர் கூட அனுப்புகின்றார். ப்ரம்மரதமொன்று தயார் செய்கின்றார். கோயிலுள்ள அர்ச்சகர் உள்பட அனைத்துக் கொத்து கைங்கர்யபரர்களும், அகில ஸ்ரீவைஷ்ணவர்களும், எல்லா ஆச்சார்யர்களும், மற்றுமுள்ள ஸேவார்த்திகளும், மற்றையோரும் பட்டரை சூழ்ந்து அவரை பிரிய சகியாது கூடவே வருகின்றனர். அரங்கன் முற்றம் அங்கே வெறிச்சோடியது. பட்டர் தம் திருமாளிகையினுள் புகுந்து தம் திருத்தாய் ஆண்டாளை ஸேவிக்கின்றார். ஆண்டாள்,
‘நலமந்தமில்லதோர் (என்றும் நலமேயுடைய) நாடு புகுவீர்!’ என்று ஆசீர்வதிக்கின்றார். பட்டரும், ‘அம்மா! அடியேன் வேண்டுவதும் இதே!’ என்று உகந்தருளுகின்றார். (எப்படிப்பட்ட தாயும் மகனும்! நம் வைணவம் பெற்ற பேறு!)

பட்டரின் திருமாளிகையில் கூட வந்தவர்கள் அனைவரையும் வயிறார அமுது பண்ணச் செய்தனர்.
அனைவரும் அமுதுண்ட பின், பட்டர் திருமாளிகையின் நடுவில் அமர்கின்றார். திருநெடுந்தாண்டகத்தினை விசேஷமாக விரிவாக வியாக்யானம் செய்கின்றார். அதில் ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்” என்கிறவிடத்திலே, ”பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைகொண்டபின், பிறவி எனும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்” என்று இதனை இரண்டு முறை மெய்சிலிர்த்து வியாக்யானம் செய்கின்றார். மேற்கொண்டு பேச முடியவில்லை! திருமேனி பூரித்து மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றது! புன்முறுவல் பூத்தவண்ணம் திருமுடியின் மேல் அவர்தம் இரு கைகளும் குவிந்து நமஸ்கரிக்கின்றது. எழுவதற்கு முயற்சிசெய்து பாதி எழுந்த நிலையில் பின்னாலிருந்த அணையினில் சாய்கின்றார். பட்டரின் சிரக் கபாலம் படீரென வெடிக்கின்றது. அரங்கனையே ஆட்கொண்ட அந்த பறவை சுதந்திரம் பெற்று திருநாட்டுக்கு பறக்கின்றது

பட்டர் பரமபதிக்கும் போது அவரது தாயாரான ஆண்டாள் அருகிலுள்ள ஒரு அறையில் அரங்கனைத் தியானித்த வண்ணம் இருந்தாள். பட்டரின் சீடர்கள் ஆண்டாளிடத்து, ”பட்டர் இளைத்து எழுந்தருளியிருக்கிறார்’ என்று பட்டர்பரமபதித்ததை அறிவிக்கின்றார். அந்த பரம ஸ்ரீவைஷ்ணவிக்கு திருவுள்ளம் கலங்கவில்லை! திருமுகம் கன்றவில்லை! கண்ணீர் மல்கவில்லை! வண்டு எப்படி பூவானது நோகாமல் அதன் மேல் அமருமோ, அதுபோன்று பட்டரது திருமேனியினை அவரது ஹ்ருதயகமலத்தினை அலர்த்தி தன் மேல் சார்த்திக் கொண்டாள். ‘பரமபத நிலையனுக்கும் அங்குள்ள நாச்சிமாருக்கும் பெருவாழ்வும் பெருங்களிப்பும் அடையும்படி இந்த ஆத்மா செல்லுகிறதே! உடையவன் உடைமையைக் கைக்கொண்டால், நாம் வெறுக்கலாமோ?” என்று கூறி தம் மகனை நெஞ்சோடு அணைத்தப்படி அமைதியாயிருந்தாள்! கோயிலார்கள் அனைவரும் அனைத்துமே பறிபோனது போன்று கலங்கி கண்ணீர் வடிக்கின்றனர். நஞ்சீயர் வேரற்ற மரம் போல சோகமே உருவாய் வீழ்ந்து கிடக்கின்றார். கூடியிருந்தோர் கண்ணீர் மழை சொரிகின்றனர்! நம்பெருமாளின் முகம் கன்றி காட்சியளிக்கின்றது. நம்பெருமாளும், தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி, திருவெண்சாமரம், திருவாலவட்டம், திருவெண்கொற்றக்குடை, வெண்முத்தின் கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில் அனுப்பிவைத்து, ‘நம்முடைய அவப்ருதோத்ஸவம்(திருமஞ்சன உத்ஸவம்) கொண்டாடுமாப்போல் பட்டருக்கும் அவப்ருதோத்ஸவங் கொண்டாடுங்கோள்” என்று திருவுள்ளமாய், பெருமாளும் நாச்சிமாருமாய் திருமஞ்சனம் கண்டருளி, ‘நம் புத்ரனை இழந்தோமே!’ என்று வருந்தி வெற்றிலைப் பாக்குக் கூட அமுது செய்யாமல் வருத்தமுடனே தம்மிடத்திற்கு எழுந்தருளினார்.

நஞ்சீயர் உள்ளிட்ட கோயிலார்கள் பட்டருடன் கூடப் பிறந்த வேதவியாசப்பட்டரைக் கொண்டு பட்டருக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் செய்து பள்ளிப்படுத்துகின்றனர். அவப்ருதோத்ஸவமும் நம்பெருமாள் திருவுள்ளப்படிச் செய்து மீண்டு வருகின்றனர்.  பட்டரது பிரிவினால் வெறிச்சோடிப் போன திருமாளிகையினைக் கண்டு மனம் வெதும்பி சோகித்து அழுகின்றார். ஆண்டாள் பட்டர் பெற்றப் பேற்றினைக் கூறி தம் இன்னொரு மகனை சமாதானப்படுத்துகின்றாள். பட்டருக்கு தீர்த்த திருவத்யயநம் ஆனவுடன்  பட்டர் பெருமாளைத் திருவடித் தொழச் செல்கிறார்.

அரங்கன் சீராமப்பிள்ளையை அருளப்பாடிட்டு அருளுகின்றார், ” பட்டரையிழந்தோம் நாம்! உமக்கு நாம் இருக்கின்றோம்! முசியாதே கொள்ளும்!(வருத்தப்படாதே!)” என்று தேற்றி பட்டருக்குப்ரஹ்மரதம் பண்ணுவித்துத் திருமாளிகையில் கொண்டு சேர்க்கின்றார். பட்டருக்குப் பிறகு  பரம சிரத்தையுடனே ஸ்ரீரங்கஸ்ரீயின் தர்ஸநம் நிர்வஹித்து வருகின்றார்.

பட்டர் அதிக திவ்யதேசங்களுக்குச் சென்றதாய் ஏதும் குறிப்புகளில்லை. பட்டரை அதிவிசேஷமாய் ஈர்த்து தம்மிடத்தேயே வைத்துக் கொண்டது அரங்கன்தான்!. நம்பெருமாள் யாரிடமுமே அதிகம் பேச மாட்டார். பெரும்பாலும் கனவில்தான் தோன்றி பேசுவார். பேசினாலும் சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு மறைந்து விடுவார். அந்த அரங்கனே பட்டரிடத்தில் அதீதப்ரீயனாய், அந்தரங்கனாய், அதிகம் ஈர்க்கப்பட்டவனாய், அற்புத தந்தையாய், அளவற்ற நேசமுடையவனாய், பரிவுடனிருந்தார். அரங்கன் அதிகம் அளவளாவியது பட்டருடன் மட்டுமே!. பட்டரிடத்து அளவிலாத சந்தோஷத்துடன் மேலே வீடு அளித்தேன் என்று அனுப்பி வைத்தாலும் அர்ச்சையில் கண்டிப்பாக இருதலைக் கொள்ளி எறும்பாய் அவனும் அவதிப்பட்டிருப்பான்!.

பட்டரும் மேல்கோட்டை திருநாராயணபுரம், திருக்கோஷ்டியூர் முதலிய திவ்யதேசங்களில் எல்லாம் தங்கியிருந்தபோதும், எப்போது ஸ்ரீரங்கம் திரும்புவோம் என்றேதானிருந்தார்.

‘நம்பெருமாள் அஞ்சலென்ற கை மறுத்தாலும், அவ்வாசலெழிய வேறெரு போக்கு உண்டோ?’ என்று கூறியபடி திருவரங்கத் திவ்ய தம்பதிகளைத் தவிர மற்றொரு கதியின்றியிருந்தார். அரங்கனிடத்து கைங்கர்யம் செய்பவர்கள் யாருமே இப்படியிருப்பதுதான் நற்கதி! பிறவிப்பயன்! அரங்கன் கற்பக விருட்சம்! நாம் எதை மனதார வேண்டுகின்றோமோ அதை கைவல்யமாக அளிப்பதில் வல்லவன்!. நாமும் பட்டர் எப்படி நம்பெருமாளையும் தாயாரையும் ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்திருந்தாரோ, அதேப் போன்று
நம்முடைய தாயாகவும் தந்தையாகவும் போற்றி வணங்க வேண்டும். அந்த மனப்பக்குவத்தினை நன்கு வளர்த்து நம்பெருமாளும் தாயாருமே கதியென்று கிடக்க வேண்டும். நீயே கதியென்று கிடந்தால் நம் விதியை அவன் பார்த்துக் கொள்வான்.

‘எனது நான் எனச் செருக்கி மமதையுற்று அலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப தெய்வமே!
எனதுளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாடும்
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ!”

பட்டரிடத்து அரங்கன் மேலே வீடு தந்தோம் என்றவுடனேயே ‘மஹாபிரஸாதம்’ என்று ஏற்றுக்கொண்ட பிறகு பட்டருக்கு ஒரு சந்தேகம். இதேப் போன்று நம்பெருமாள் அங்கு ஸேவை சாதித்தால்தான் போவேன் என்று அடம் பிடிக்கின்றார் அரங்கனிடம்!. நெகிழ்ந்து போனான் அரங்கன்!.

பக்தி என்பது எப்படியிருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார்கள்.

பட்டர் நஞ்சீயருக்குத் திருவாய்மொழிக்கு பிள்ளான் என்பவரது உரைப்படி ஆறாயிரமும் நன்றாக உபதேசித்தார். நஞ்சீயரும் அதனை நன்றாக அறிந்து பட்டரை அனுசரித்து அவருடைய அனுமதியைப் பெற்று, திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரம் படியாக ஒரு

வ்யாக்யானம் அருளிச்செய்தார். ‘அதனைத் தெளிவற பட்டோலை கொண்டு எழுதி தருவார் எவரும் உண்டோ?’ என்று விசாரிக்க, நஞ்சீயரின் சீடர்கள் நம்பூர் வரதராஜன்
என்பவரை அறிமுகப்படுத்தினர். நம்பூர் வரதராஜனின் எழுத்து மணி மணியாய் இருந்தது. ஆயினும் நஞ்சீயருக்கு ஒரு சிறிய நெருடல். ‘இது திருவாய்மொழிக்கான வ்யாக்யானமாகையினாலே
ஒரு விலக்ஷணரைக் (வைஷ்ணவ லக்ஷணம் பூர்ணமாகக் கொண்டவர்) கொண்டு எழுதுவிக்க வேண்டும். வெறும் திருவிலச்சினம், திருநாமம் மாத்ரமுண்டான இவரைக் கொண்டு எழுதுதல் தகுமா? என்று யோசிக்கலானார். வந்தவர் புத்திசாலி. ‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்கு வரும்படியே திருத்திப் பணிகொள்ளலாகாதோ?’ என்று கேட்க, நஞ்சீயர் மிகவும்
திருவுள்ளம் உகந்தார். பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து பூர்ணமாய் பிரபந்நராக ஆக்குகின்றார்.

அவருக்கு ப்ரபந்நநிஷ்டைகளை பூர்ணமாக உபதேசித்து, தாம் எழுதிய திருவாய்மொழிக்கான ஓன்பதினாயிரம் படியையும் ஒரு முறை , தெளிவாக உபதேசித்து அருளுகின்றார். தாம் வியாக்யானம் எழுதிய பட்டோலையை அவர் கையிலே தருகின்றார்.
வந்தவர், ‘அடியேன்! ஊரிலே போய் எழுதிக்கொண்டு வருகிறேன்!” என்று கூறி அனுமதி பெற்று காவேரியினைக் கடந்து தம் ஊருக்குச் செல்கின்றார். ஓரிடத்தில்
காவேரியில் ஆழம் அதிகமிருக்கவே, தம்முடைய தலையில் நஞ்சீயரின் ஓலைப்பிரதிகளைக்
கட்டிக் கொண்டு நீந்துகின்றார். அவ்வோலைப் பிரதிகள் தவறுகின்றன. காவேரியின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்படுகின்றது. ‘பட்டோலை போய் விட்டதே!
இனி நாம் என்ன செய்யக் கடவோம்” என்று சோகமாகின்றார். பின்னர் ஒருவாறு தேறி
நஞ்சீயர் தமக்கு அருளிச் செய்தமையை நினைவுக்குக் கொண்டு வந்து அர்த்தங்களைத் தப்பாமல் பட்டோலைச் செய்கின்றார். அவர் தமிழ் புலமை மிக்கவரானதால் சில பதங்களுக்கு தமக்குதித்த கம்பீரமான பதங்களாலே வியாக்யானம் எழுதுகின்றார். மிக அழகாக நேர்த்தியாக
பட்டோலைப் படுத்தி திரும்பவும் நஞ்சீயரிடத்து வந்து அதனைச் சமர்ப்பிக்கின்றார்.

நஞ்சீயர் தாம் அருளிச் செய்தமை சிலவிடங்களில் மாறுபட்டு அதியற்புதமான வியாக்யானங்களைக் கண்டு, ‘இதென்?” என்று வினவுகின்றார். நம்பூர் வரதராஜன்
நடுங்குகின்றார். பேசாது நிற்கின்றார். ‘நீர் பயப்பட வேண்டாம்! உண்மையைச் சொல்லும்!” என்கிறார் நஞ்சீயர். நடந்ததை கூறுகின்றார் வரதராஜன்.
நஞ்சீயர் வியந்து, ‘இவருடைய புத்தி விசேஷமிருந்தபடி என்தான்! இவர் மஹா சமர்த்தர்! நன்றாக எழுதியிருக்கின்றார்” என்று புகழ்ந்து மிகவும் திருவுள்ளமிரங்கி வரதராஜனை
வாரியணைக்கின்றார்.

‘இவர் நம்முடைய பிள்ளை, திருக்கலிகன்றிதாஸர்” என்று திருநாமஞ்சாற்றி, தம்முடனேயே அவரை அரைக்ஷணம் கூடப் பிரியாது ஸகலவித சாஸ்திரங்களையும்
அர்த்த விசேஷங்களையும் அவருக்கு அருளிச் செய்கின்றார். அவரும் ‘சீயரையல்லாது
‘தேவுமற்றறியேன்’ என்று எழுந்தருளியிருந்தார். சீயர் நம்முடைய பிள்ளை என்று அணைத்தமையால் அன்று முதல் வரதராஜன் ‘நம்பிள்ளை’ என்றே அழைக்கப்பட்டார்.

_______________________________________________

ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரம்படி, 32000படி, என்கின்றோமே, இந்த ‘படி’ என்றால் என்ன?

படி என்றால் அளவு. உயிர்மை எழுத்து உயிரெழுத்து ஆகிய இரண்டும் சேர்த்து 32 அட்சரம் கொண்டது
ஒரு க்ரந்தம்.

ஒரு க்ரந்தம் என்பது தமிழில் ஒரு படி.

6000 க்ரந்தம் கொண்டது விஷ்ணு புராணம்.
குருபரம்பரை ஆறாயிரப்படியும், விஷ்ணுபுராணமும் ஏட்டில் சம அளவில் இருந்தமையால்
‘குருபரம்பரை ஆறாயிரப்படி ‘ என்றழைக்கப்பெற்றது.

இதேப் போன்று இராமாயணம் 24000 க்ரந்தம். இதுவும் பெரியவாச்சான் பிள்ளை 24000 படியும் சம அளவில்
இருந்ததால் பெரியவாச்சன் பிள்ளை 24000படி என்றழைக்கப்பெற்றது.

சுதப்பிரகாசிகை 36000 க்ரந்தம். இதுவும் ஸ்ரீபாஷ்யமும் ஒரே அளவில் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யம் ஈடு 36000படி என்றழைக்கப்பெற்றது.

Tuesday 13 November 2018

ஜகதாசார்யரும், லோகாசார்யரும்

இன்று(14/11/2018 ஐப்பசி திருவோணம்-ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர்/உலகாரியர் திருநட்சித்திரம்.18 ரஹஸ்ய கிரந்தங்களை இயற்றி, ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய அடிப்படைத் தத்துவங்களை, திருமால் அடியார்கள் எளிதில் புரிந்து கொள்ள வழி செய்தார். இஸ்லாமியபடையெடுப்பிலிருந்து ஸ்ரீநம்பெருமாளையும்,ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய
த்தையும் காப்பாற்றிய, அரிய கைங்கர்யத்தைச் செய்த, ஆசார்ய புருஷர்.இவருடைய கைங்கர்யங்கள் எல்லா வற்றுக்கும் ஜகதாசார்யர், ராமானுஜரின் கைங்கர்யங்கள் முன்னோடியாக இருந்து வழி காட்டியுள்ளன. அது பற்றி சில வைபவங்களைப் பார்ப்போம்.

1.ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கான, அடிப்படை கிரந்தங்களை இயற்றிய மஹான்கள்.

ராமானுஜர் காலத்தில் புறச்சமயங்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது.அவை பற்றிய கிரந்தங்கள்/வ்யாக்யா
னங்கள் எல்லாமே சம்ஸ்கிருதத்தில் இருந்தன.
அந்தப் புரட்டு வாதங்களை நிராகரிக்கவும்,விசிஷ்டாத்வைதத்தின் ஏற்றத்தை எடுத்துரை க்கவும், அவரும் சம்ஸ்கிரு தத்தில்எழுதவேண்டிதாயிற்று.அவ்வாறு அவர் "ஸ்ரீபாஷ்யம்"
"வேதார்த்த ஸங்ரஹம்" முதலான 9 கிரந்தங்களை இயற்றினார்.அவை 'நவரத்னங்கள்'என்று போற்றப்
படுகின்றன.

பிள்ளை லோகாசார்யர், காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் நன்றாக வளர்ந்திருந்தது.திவ்யப்பிரபந்தம்/திருவாய்மொழி வ்யாக்யானங்கள் மிகச் சிறப்பான முறையில் இருந்தன.
திவ்யப்பிரபந்தம்உரைக்கும்,
திருமால் அனுபவத்தில் திளைக்கும் அடியார்கள், ஸ்ரீவைஷ்ணவத் தத்துவ விசாரங்களை முறைப்படி அறிந்து நடக்க, 18 ரஹஸ்ய க்ரந்தங்கள்இயற்றினார்.அவற்றுள் "முமூக்ஷுபடி" "ஸ்ரீவசனபூஷணம்" ஆகியவை மிக முக்கியமானவை.
மணிப்ரவாள நடை கிரந்தங்கள் அதிகம் இருந்தகாலகட்டத்தில்
,இவை எளிய தமிழில் ஸ்ரீவைஷ்ணவ நெறிமுறை
களை, விளக்குவதாக அமைந்தன.எதிராசரைப் பெரிதும் கொண்டாடிய மணவாள மாமுனிகள், லோகாசாசார்யரை 8 பாசுரங்களால்,உபதேச ரத்தின மாலையில் கொண்டாடுகிறார்.

2.காஞ்சி வரதராஜப் பெருமாளின் பரிபூரண அநுக்ரஹம், பெற்ற ஆசார்ய புருஷர்கள்:

வரதர் திருக்கச்சி நம்பிகள் மூலம் சொன்ன, ஆறு வார்த்தைகளே, ராமானுஜர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது..
விசிஷ்டாத்வைத சித்தாந்த த்தின் அடிப்படையாக அமைந்தது.வரதர் அருளுடன் இளையாழ்வார் துறவு பூண்டு எதிராஜர் ஆனார்.சர்வக்யஜ்ய பட்டரிடம் 17 நாள் நடந்த வாதப்போரில்,எந்த முடிவும் ஏற்படாததால், சோர்ந்திருந்த ராமானுஜர் கனவில் தோன்றிய வரதர்,ஆளவந்தாரின் மாயாவதக் கண்டன
ஸ்தோத்ரங்கள் துணை
கொண்டு வாதிடச் சொன்னார்.
மறுநாள் காலை வரதர் அருளால், கம்பீரமாக வந்தார் வாத மண்டபத்துக்குள். ராமானுஜரின் தேஜஸைக் கண்ட சர்வக்யஜ்யர்,வாதிட முடியாமல் அவரைச் சரணமடைந்து 'அருளாளப்
பெருமாள் எம்பெருமானார்' ஆனார்.ராமானுஜர் நியமனப்படி,கூரத்தாழ்வான் வரதரை வேண்டிக்
,கண்பார்வைபெற்றார்.ராமானுஜரின் திருவாராதனைப் பெருமாளாகஎழுந்தருளியிருந்த, காஞ்சி வரதர்,பல சூழ்நிலைகளிலும்,அவருக்கு உகந்த வழிகாட்டியாக விளங்கினார்.

வரதரின் அம்சமாகவே,பிள்ளை லோகாசார்யர்,ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார். காஞ்சியில் மணப்பாக்கத்து நம்பி என்னும் அடியாருக்கு,தேவப்பெருமாள் சில உபதேசங்களைச் செய்தார்.ஒரு நாள் உபதேசத்தை நிறுத்திவிட்டு, நம்பியை ஸ்ரீரங்கம் செல்லுமாறும்,தாம் அங்கு வந்து,உபதேசங்களைத் தொடர்வதாகவும் அருளினார்.ஸ்ரீரங்கம் வந்த நம்பி காட்டழகிய சிங்கர் சந்நிதி அருகில்(அன்று அந்தப்பகுதி மக்கள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியாக இருந்தது) இருந்து வந்தார்.ஒரு நாள் அங்கு ஒரு ஆசார்யரும்,(பிள்ளை லோகாசார்யர்) அவருடைய சீடர்கள் சிலரும் வந்தனர்.சுற்றுமுற்றும் பார்த்து,வேறு ஆட்கள் இல்லை என்று தெரிந்து கொண்டு, ஆசார்யர் உபதேசம் ஆரம்பிக்க சீடர்கள் பவ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அங்கே மறைந்திருந்த மணப்பாக்கத்து நம்பி,அவற்றைச்செவியுற்றார்.தேவப்பெருமாள் காஞ்சியில் எங்கு நிறுத்தினாரோ,அதன்
தொடர்ச்சியாக இந்த உபதேசங்கள் இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்ட நம்பி,வெளியே வந்து லோகாசார்யரின் திருவடிகளில் தண்டனிட்டு"அவரோ நீர்"
என்று சிலாகிக்க,உலகாரியர்
,"ஆவது;எது"(ஆம்;அதற்கு என்ன இப்போது) என்று பகர்ந்து, தாமே தேவப்பெருமாள் என்று உணர்த்தினார்.(இந்த உபதேசங்களே,முமூக்ஷுப்படி,
ஸ்ரீவசனபூஷணம் முதலானவை)

மேலும் ஒரு வைபவம்: உலகாரியர்,ஜோதிஷ்குடியில், தம் இறுதிக்காலத்தில்
ஒரு நாள் தம் சீடர் கூரகுலோத்தம தாசரை அழைத்து,பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சராக இருக்கும்திருமலைஆழ்வாரைத்(திருவாய்மொழிப்பிள்ளை) திருத்திப் பணிகொண்டு, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயப் பணிகளில் ஈடுபடுத்துமாறு உரைத்தார். இன்னொரு சீடர் நாலூர்ப்பிள்ளையிடம்,திருமலை ஆழ்வாருக்கு, திருவாய் மொழியின் அர்த்த விசேஷங்களைக் உபதேசிக்குமாறு கூறினார். சில ஆண்டுகளுக்குப்பின் ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தின் பிரதம ஆசார்யராக மிளிர்ந்த திருவாய்மொழிப்பிள்ளை,காஞ்சிக்கு தேவப்பெருமாளைச்
சேவிக்கச் சென்றார்.அப்போது தேவப்பெருமாள், சந்நிதியில் நின்றிருந்தநாலூர்பிள்ளையிடம்"நாம் ஜோதிஷ்குடியில் நியமித்தாற் போல்,இவருக்கு திருவாய்மொழி/அருளிச்செயல் அர்த்த விசேஷங்களைச்
சாதித்தீரா"என்று கேட்டார்.

3 இஸ்லாமிய படையெடுப்பி லிருந்து, திருமால் திருவிக்ரக ங்களைக் காப்பாற்றி, தாயினும் ஆயின செய்த பெரியோர்கள்

கர்நாடகாவின் மீது படையெடு த்து வந்த டில்லி சுல்தான், மேல்கோட்டையிலிருந்த செல்வப்பிள்ளை விக்ரக த்தை,கவர்ந்து சென்று விட்டான்.மேல்கோட்டை வந்த ராமானுஜர், இதையறிந்து டில்லி சென்று சுல்தானின் மகளின் அந்தப்புரத்தில் இருந்த செல்வப்பிள்ளையை "வாராய் செல்வப்பிள்ளாய்"என்று பாசத்துடன் அழைக்க, செல்வப் பிள்ளையும் கால் சலங்கை 'ஜல்,ஜல்'என்று இசைக்க நடந்து வந்து,ராமானுஜர் மடிமீது அமர்ந்து கொண்டார். செல்வப்பிள்ளையை பல்லக்கில் வைத்து அழைத்துக் கொண்டு வந்த உடையவர்
,மேல்கோட்டையில் பிரதிஷ்டை செய்தார்.(சுல்தானின் மகள் பீபிநாச்சியாரும் உடன் வந்தார்.)

தென்னகத்தின் மீது படையெடுத்து வந்த யூலுக்கான்(முகமது பின் துக்ளக்),பல வைணவ/சைவ கோவில்களைச்சூறையாடி,
நகைகளைக் கொள்ளை
யடித்தான்.அவன் ஸ்ரீரங்கத்தின் மீது படையெடுத்து வருகிறான் என்று அறிந்து,லோகாசார்யர் பெரியபிராட்டியார் விக்ரகத்தை வில்வமரத்தடியில் மறைத்து வைக்கவும்,பெரிய கோவில் கர்ப்பக்கிரகத்தைக் கல் வைத்து அடைக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு,நம்பெருமாளையும்,உபய நாச்சிமார்களையும் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு சில சீடர்களுடன் உடனே புறப்பட்டு காட்டு வழியாக,தென்
திசையில் பயணித்து சென்றார்.
மதுரைக்கு அருகே உள்ள ஜோதிஷ்குடி(கொடிக்குளம்) என்னும் இடத்தில்,ஆனை
மலையின் பின்புறம் உள்ள குகையில் சில ஆண்டுகள் வைத்துக் காப்பாற்றினார். அங்கு நித்யதிருவாராதனை களையும் சிறப்பாக நடத்தினார்.அவர் அங்கேயே பரமபதம் அடைந்தார்.அவரது சீடர்கள் நம்பெருமாளை எடுத்துக் கொண்டு,மேலும் தெற்கே சென்று,மலையாள தேசம் வழியாக,கர்நாடகா சென்று,அங்கிருந்து திருமலை சென்றனர்.திருமலையில் த்வஜஸ்தம்பத்துக்கு முன் வலதுபுறம் உள்ள ரங்கமண்டபத்தில் தான் நம்பெருமாள் பல ஆண்டுகள் இருந்தார்.லோகாசார்யர்,நம்பெருமாளைஎடுத்துச் சென்று 48 ஆண்டுகள் கழித்து,கி.பி 1371ல் நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

4.தள்ளாத வயதிலும்,தளராமல் கைங்கர்யங்கள் ஆற்றிய ஸ்ரீமான்கள்:

120 ஆண்டுகள் நிறைவாழ்வு, வாழ்ந்த,ராமானுஜர் இறுதிவரை ஓயாமல் கைங்கர்யங்கள் செய்தார். அவர் தம் 67 ஆவது வயதில் டில்லி சென்று,செல்வப் பிள்ளையை மீட்டு வந்தார்.
சுமார் 25 ஆண்டுகள் பாரத தேசம் முழுதும் யாத்திரை சென்று(நடந்தே)
பல திவ்யதேசங்களிலும் எண்ணற்ற கைங்கர்யங்கள் ஆற்றினார்.தம்முடைய 113 ஆவது வயதில், திருமலைக்கு மூன்றாவது யாத்திரை மேற்கொண்டார்.அந்த சமயத்தில் தான் திருப்பதி கோவிந்தராஜர் சந்நிதியை தற்போது உள்ளது போல் நிர்மாணித்தார்.தில்லை கோவிந்தராஜரை திருப்பதியில் பிரதிஷ்டை செய்தார்.திருமலை/திருப்பதி கோவில் பணியாளர்களுக்கு
,வீடுகள் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

பிள்ளைலோகாசார்யர்,நம்பெருமாளை எடுத்துக் கொண்டு ஜோதிஷ்குடி செல்லும் போது அவருக்கு வயது 116 (106 என்றும் சொல்கிறார்கள்.எப்படி
யிருந்தாலும் தள்ளாத வயது தானே!!)

5.கடையனுக்கும்,கடைத்தேற்றம் அளித்த கருணைவள்ளல்கள்:

ஓராண் வழியாய் வழங்கி வந்த உபதேசங்களை,ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கி, சாதிமதப் பாகுபாடுஇன்றி , அனைவரும் மோட்சம் அடைய வழிவகை செய்தார்.மல்லர் குலத்தைச் சேர்ந்த பிள்ளை உறங்கா வில்லி தாசருக்கு,
உயர்ந்த ஸ்தானம் வழங்கினார்.காது கேளாத/வாய் பேச முடியாத முடவனுக்கும்,தயிர்க்காரிக்கும் மோட்சம் கிடைக்கச் செய்தார்.

பிள்ளை லோகாசார்யர்; தாம் பரமபதம் செல்வதற்கு முன் தாம் அமர்ந்தஇடத்திலிருந்து,
கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிந்த அனைத்து ஜீவ
ராசிகளையும்,தாவரங்கள்,புல்/பூண்டு ஆகியவற்றையும் கண் குளிரக் கடாட்சித்து அவர்கள்/அவை மோட்சம் அடைய வழி வகுத்தார்.இன்றும் ஜோதிஷ்குடியில்,லோகாசார்யர் திருவரசு/நம்பெருமாள் எழுந்தருளியிருந்த குகை ஆகிய இடங்களில்,சுமார் ஒரு பர்லாங்க் தூரத்திலிருந்தே
,யாரும் மிதியடி போட்டுக்கொண்டு செல்வதில்லை.எல்லையிலேயே தண்டம் சமர்ப்பித்துச் செல்கிறார்கள்.மீனவகுலத்தில்
பிறந்த விளாஞ்சோலைப் பிள்ளையைத் தம் ப்ரிய சீடராக ஏற்று அவருக்கு அனைத்து ரஹஸ்ய அர்த்தங்களையும் எடுத்துரைத்தார்.ஸ்ரீவசனபூஷணத்தின் அர்த்தங்களை திருவாய்மொழிக்குச் சொல்லு மாறு விளாஞ்சோலைப் பிள்ளையிடம் உரைத்தார்.

6.கீதாசார்யரின் இருபக்கமும்,
எழுந்தருளியிருக்கும் ஜகதா சார்யரும்,லோகாசார்யரும்.

ஸ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதிக்கு அருகில்,கீதாசார்யர் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளி
யிருக்கிறார்.ரதத்தில் அர்ச்சுனனுக்கு,கீதோப
தேசம் செய்யும் வடிவில்.
அவருக்கு இடதுபுறம் ஜகதாசார்யர் "தானான திருமேனி"யாக,தனி
சந்நிதியில் சேவை சாதிக்கிறார். வலதுபுறம் லோகாசார்யர்,தனிக் கோவிலில் சேவை சாதிக்கிறார்.உடையவர் சந்நிதியில் அவருடைய மானசீக ஆசார்யர் ஆளவந்தாரும், அவருடைய திருவாராதனைப் பெருமாள்
காஞ்சி வரதரும் எழுந்தருளி இருக்கின்றனர்.லோகாசார்யர் சந்நிதியில் அவருடைய திருவாராதனைப் பெருமாள் "சலங்கை அழகியார்- கிருஷ்ணர்"(அவருடைய திருத்
தந்தையார் வடக்குத் திருவீதிப்பிள்ளை ஆராதனை செய்த பெருமாள்) சேவை சாதிக்கிறார்.

7.ஆசார்யர்களின் அருமை யான சீடர்கள்:

ஜகதாசார்யருக்கு 12000 சீடர்கள் இருந்தனர்.ஆனால் கூரத்தாழ்வானும்,முதலியாண்டானுமே அவருக்கு அத்யந்த சீடர்களாக விளங்கினர்.அவரே பவித்ரம், தண்டு என்று அவர்களைக் கொண்டாடினார். இவர்கள் இருவரும் ஸ்ரீரங்கம் உடையவர் சந்நிதியில் துவாரபாலகர்கள் போல் நின்று சேவை சாதிக்கிறார்கள்

லோகாசார்யருக்குப் பல சீடர்கள் இருந்த போதிலும்,
கூரகுலோத்தம தாசரும்,
விளாஞ்சோலைப் பிள்ளையும்
இரண்டு முக்ய சீடர்களாகத் திகழ்ந்தனர்.இவர்கள் ஸ்ரீரங்கம் பிள்ளைலோகாசார்யர் சந்நிதி
வாயிலின் இருபுறமும் நின்று சேவை சாதிக்கிறார்கள்.

8.போற்றும் பொன்னடிகள்:

ராமாநுஜர் சந்நிதிகளில்,நம் தலையில் சாற்றப்படும், உடையவர் திருவடிகள் (பெருமாள் சந்நிதிகளில் சாற்றப்படும் சடாரி போன்றது)
உடையவரின் அத்யந்த சீடரும், சகோதரியின் திருக்குமாரரும்
ஆன 'முதலியாண்டான்' பெயரில் சாற்றப்படுகிறது.

ஸ்ரீரங்கம் பிள்ளை லோகா சார்யர் சந்நிதியில்,அவர் திருவடிகள் அவரது சீடரும், திருத்தம்பியாரும் ஆன
"அழகிய மணவாளப் பெருமாள்
நாயனார்" பெயரில் சாற்றப் படுகிறது.

9.காட்டழகிய சிங்கர் கோவில் வைபவங்கள்:

ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களில் கடைசி இரண்டு பாசுரங்களும் சாற்றுமறைப் பாசுரங்களாக இரண்டு முறை சேவிக்கப்படும். ஆனால் அமுதனாரின் இராமாநுச நூற்றந்தாதியில் மட்டும் மூன்று பாசுரங்கள்- "இருப்பிடம்வைகுந்தம்"(106),
"இன்புற்ற சீலத்து
இராமாநுச"(107),
"அங்கயல் பாய் வயல்"(108)
சாற்றுமறைப் பாசுரங்கள். இதற்குக் காரணம்--அமுதனாரும் அவர் சீடர்களும் காட்டழகிய சிங்கர் சந்நிதியில் அமர்ந்து இராமாநுச நூற்றந்தாதி எழுதிக் கொண்டி ருந்தனர்.105 ஆவது பாசுரம் முடித்து,106 தொடங்கும் முன்னர்
அழகியசிங்கரைச் சேவிக்க உடையவர் அங்கு வந்தார். உடனே அவர்கள் அனைவரும் எழுந்து அவரைச் சேவித்தனர். சாற்றுமுறைப் பாசுரங்களை எழுந்து நின்று சேவிப்பதால், எழுந்து நின்றதற்குப் பின்னால் சேவித்த மூன்று பாசுரங்களும் சாற்று மறைப் பாசுரங்கள் ஆயின!!!

லோகாசார்யர் தாம் தேவப்பெருமாளின் அம்சம் என்பதை,மணப்பாக்கத்து நம்பியிடம் உரைத்ததும் இந்தச் சந்நிதியில் தான்.(குறிப்பு 2 ல் விரிவாக)


Sunday 11 November 2018

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்



இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து
அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி.

1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார்.
மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள்
'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார்.

2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர்
யங்களுக்கும் இல்லறம் தடை யாக இருப்பதை உணர்ந்து துறவறம் மேற்கொண்டார். காஞ்சி தேவப்பெருமாளிடம் காஷாயம் பெற்று'எதிராஜர்' ஆனார்.அழகிய மணவாளர் லெளகீக வாழ்க்கையின் தீட்டு முதலான தோஷங்கள் தம் கைங்கர்யங்களுக்கு இடையூறாக இருப்பதால் துறவறம் மேற் கொண்டார்.தம் ஆசார்யர்திருவாய்
மொழிப்பிள்ளையின் சந்நியாசி சீடர் ,சடகோபயதி
யிடம், ஆழ்வார் திருநகரியில் துறவு பூண்டார்.'சடகோப முனி' ஆனார்.

3.ராமானுஜர் அவரது மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் ஆசைப்படி,ஆசார்யர் திருவரங்கப் பெருமாள் அரையரால் ஸ்ரீரங்கம் அழைத்து வரப்பட்டு,ஸ்ரீ வைஷ்ணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் ஆணைப்படி ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

4.ஸ்ரீரங்கம் வந்த ராமானுஜரை தம்முடைய தகுதிப் பெயரான
"உடையவர்"(அனைத்து லீலாவிபூதிகளையும்,நித்ய விபூதியையும்உடையவர்)என்னும் பெயரால் ஸ்ரீரங்கநாதப் பெருமாள்அழைத்தார்.ஸ்ரீரங்கம் வந்த மாமுனிகளை-சடகோபமுனியை,தம் பெயரான"அழகியமணவாளன்"என்னும்திருநாமத்தால்அழைத்தார்,ஸ்ரீரங்கநாதர்.(மாமுனிகளின் இயற்பெயரே அழகியமணவாளன்;ஆனாலும்,துறவுபூண்டபின்'சடகோபமுனி'எனனும் பெயர்பெற்றார். ஆனால் நம்பெருமாள் அழகியமணவாளன் என்னும் பெயரிட்டே அழைத்தார்.அந்தப் பெயராலேயே மணவாள மாமுனிகள் என்னும் பேறு பெற்றார்).

5.உடையவருக்கு, சேரன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு கோவில் மணியகாரரை நியமித்தார் நம்பெருமாள்.அந்த சேரன்மடத்தில் தான் உடையவர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலம் முழுதும் வாசம் செய்தார்.(வடக்கு உத்திர வீதியில் இருக்கும் இன்றைய ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம்).
மாமுனிகளுக்கு,பல்லவராயன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு நியமித்தார் நம்பெருமாள்.மாமுனிகள் தம் அந்திமக்காலம் வரை அந்தத் திருமாளிகையில் தான் இருந்தார்.(தெற்கு உத்திர வீதியில் இருக்கும் மணவாள மாமுனிகள் சந்நிதி).

6.ராமானுஜரிடம்சங்கும், ஆழியும் பெற்று அவரைத் தம் ஆசார்யராகஏற்றுக்கொண்டார் திருவேங்கடவர்(திருக்குறுங்குடி நம்பியும் உபதேசம் பெற்றும், திருமண்காப்பு சேஷம் தரித்தும் ராமானுஜரை ஆசார்யராகஏற்றுக்கொண்டார்).திருவேங்கடவர் திருமலை கோவில் வளாகத்தில் தம் ஆசார்யர் ராமானுஜருக்கு மட்டுமே, சந்நிதி தந்து ஏற்றம் அளித்துள்ளார்.திருவேங்கடவர் அனந்தாழ்வானுக்கு அருளிய தனியனில் "ஸ்ரீமத் ராமானுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்"என்று அனந்தாழ்வானை ராமானுஜரின் பொன்னடி என்று போற்றுகிறார்.

ஸ்ரீரங்கநாதர்-நம்பெருமாள், மணவாளமாமுனிகளிடம்,திருவாய்மொழி ஈடு காலட்சேபம் கேட்டு,தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்.ஆசார்யருக்கு "ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதிகுணார்ணவம்,
யதீந்த்ரப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதர முநிம்" என்னும் பிரசித்தி பெற்ற தனியனைச் சமர்ப்பித்தார். இங்கும் 'யதீந்தரப்ரவணர்' என்று ராமானுஜர் மீது மாமுனிகள் வைத்திருக்கும் பக்தியைக்கொண்டாடுகிறார்.ஆசார்யர் மாமுனிகளுக்கு, தம்முடைய சொத்தான சேஷபீடத்தையே,தந்து ஏற்றம் அளித்தார் நம்பெருமாள்.

7.ராமானுஜர்,திருவேங்கடவர் சந்நிதியில்"வேதார்த்த ஸங்க்ரஹம்" என்னும் உபநிஷத்துகளின் சாரத்தை இயற்றிஅருளினார்.மாமுனிகள், திருவேங்கடவருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடச் செய்தார். தம் சீடர்
பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமிகளிடம் நியமிக்க அவர் இயற்றியதிருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களே,
"கெளசல்யா ஸுப்ரஜாராமா, பூர்வா ஸந்த்யா"என்று தொடங்கும் வேங்கடேச சுப்ரபாதம் ஆகும்.

8.ராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கும்,
உபநிஷத்துகளுக்கும் விரிவுரைகளாக"ஸ்ரீபாஷ்யம்"
முதலான கிரந்தங்களை இயற்றினார்.மாமுனிகள்( பிள்ளை லோகாசார்யரின்) ரஹஸ்ய கிரந்தங்களுக்கு விரிவுரைகள் இயற்றினார்.

9.ராமானுஜர்,தம் மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் விருப்பத்துக்கிணங்க,
திருவாய்மொழிக்கு விரிவான உரை எழுதச் செய்தார் (திருக்குருகைப் பிள்ளானின் ஆறாயிரப்படி வ்யாக்யானம்). மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப்பிள்ளையின் நியமனத்துக்கு ஏற்ப திருவாய்மொழி ஈடு காலட்சேபம்செய்வதையே (நம்பெருமாளுக்கும் கூட)
முக்கியமான கைங்கர்யமாகச் செய்து வந்தார்.

10.பெரிய கோவில் ஜீயர், என்று,பெரிய கோவில் பொறுப்பு அதிகாரியாக இருந்த திருவரங்கத்து அமுதனார் ராமானுஜரைச் சரணடைந்து அவர்சீடரானார். பெரிய கோவில் சாவியை ராமானுஜரிடம் ஒப்படைத்தார்.
உடையவரைப் போற்றும் பிரபந்ந காயத்ரி என்று போற்றப்படும்"இராமாநுச நூற்றந்தாதி" அருளித் தந்தார்.

பெரிய கோவிலில் முக்கிய கைங்கர்யங்களைச் செய்து வந்த,கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி, மாமுனிகளைச் சரணடைந்து,
ஆசார்யராகஏற்றுக்கொண்டார்மாமுனிகள் மீது"மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு" பாடினார்.

11.ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பரப்ப 74 சீடர்களை நியமித்து அவர்களைச் 'சிம்மாசனாதிபதிகள்' ஆக்கினார்.மணவாள மாமுனிகள் 8 பிரதான சீடர்களை நியமித்து அவர்களை 'அஷ்டதிக்கஜங்கள்' ஆக்கினார்.

12.ராமானுஜரும்,மாமுனிகளும் தங்களை,ஆதிசேஷ அவதாரங்கள் என்று சில வைபவங்கள் மூலம் உணர்த்தினர்.

13.ராமானுஜர் பெரும்பாலும் 'திருப்பாவை'யை அனுஸந்தானம் செய்து கொண்டேஇருப்பார்.மாமுனிகள்'த்வயமந்த்ரம்'அனுஸந்தானம் செய்து கொண்டே இருப்பார்.

14.ராமானுஜர்,திருமாலிருஞ்சோலை அழகருக்கு,நூறு தடா அக்காரவடிசலும்,வெண்ணெயும் சமர்ப்பித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தார் சென்ற போது,ஆண்டாள் தம் நிலையிலிருந்து சற்றே முன்னே வந்து "நம்அண்ணாவோ"என்று விழித்தார்.ஆண்டாளுக்கு அண்ணனான உடையவர் 'கோவில்அண்ணா/கோதாக்ரஜர்'என்று போற்றப்பட்டார்.

மார்கழி மாத நீராட்டு உற்சவத்துக்கு,ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற மாமுனிகள், ஏழுநாள் நீராட்டு உற்சவம் முடிந்து தான் சென்று சேர முடிந்தது.நீராட்டு உற்சவம் சேவிக்க முடியவில்லையே,என்று ஏங்கிய மாமுனிகளுக்காக, எட்டாம் நாளன்றும்-தைமுதல்நாள்-நீராட்டு சேவை சாதித்தார் கோதைநாச்சியார். அந்த வைபவம் இன்றும் தை முதல்நாள் நடைபெறுகிறது.

15.ராமானுஜர் தம் அந்திம திசை வரை, தம் சீடர்களுக்கு நல்வார்த்தைகளை உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்.
மாமுனிகளும் காலட்சேபம்/கிரந்தங்களை இயற்றுதல் ஆகியவற்றை இறுதி வரை செய்து கொண்டேயிருந்தார்.

16.ராமானுஜர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ,அவருடைய திருமேனிகள் இரண்டை நிர்மாணித்தபொழுது,அவற்றுக்குத் தாமே உகந்து மங்களாசாசனம் செய்து அருளினார்.அவற்றில் ஒன்று ஸ்ரீபெரும்புதூரில் நாம் சேவிக்கும் "தான் உகந்த திருமேனி".மற்றொன்று திருநாராயணபுரத்தில்(மேல்கோட்டை) எழுந்தருளியுள்ள "தமர் உகந்த திருமேனி"

மாமுனிகளும், தாம் வாழ்ந்த காலத்திலேயே தம் திருமேனிகள் இரண்டுக்கு மங்களாசாசனம் செய்து அருளினார்.தம் சீடர்களில் ஒருவரான அப்பாச்சியார் அண்ணாவின் வேண்டுதலு க்கு இணங்க,மாமுனிகள் தாம் உபயோகித்த ராமானுஜம் என்னும் சொம்பை உருக்கி இரண்டு திருமேனிகள் செய்யப் பணித்தார்.அவற்றில் ஒன்று சிங்கப் பெருமாள் கோவில் (பூந்தமல்லி) முதலியாண்டான் திருமாளிகையில் எழுந்தருளப்பண்ணப்பட்டு ள்ளது.இன்னொரு திருமேனியை நாங்குநேரி வானமாமலை மடத்தில் சேவிக்கலாம்.(முதல் அஷ்டதிக்கஜமும்,வானமாமலை மடத்தின் முதல் ஜீயருமான பொன்னடிக்கால் ஜீயருக்குத் தந்தருளியது).

17.ராமாநுஜர் அவதாரம் செய்து, வேதத்துக்குத் தவறான அர்த்தம் கற்பித்த வந்தபுறச்சமயவாதிகளையும்,குதிர்ஷ்டிகளையும் வாதில் வென்றும்,கிரந்தங்களை இயற்றியும் ஸ்ரீமந்நாராயணின்
விசிஷ்டாத்வைத நெறியை நன்றாக நிலை நாட்டினார்.74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து அவர்கள் வம்சத்தார் மூலம் என்றென்றும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் செழித்து வளர வழிவகை செய்தார்.

12/13 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லீம் படையெடுப்புகளால்,
இந்து மத சம்பிரதாயங்களும்,
கோவில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.வைணவ சம்பிரதாயத்துக்கும் பின்ன
டைவு ஏற்பட்டது.அந்தக் கால கட்டத்தில் தான், 1370 ஆம் ஆண்டு மாமுனிகள் அவதரித் தார்.அவர் செய்த ரஹஸ்யக் கிரந்த வியாக்யானங்களும், திருவாய்மொழி காலட்சேபங் களும் பல வித்வான்களையும் சாஸ்த்ர விற்பன்னர்களையும் அவருக்குச் சீடர்களாக்கின. அவர்கள் மூலம் வைணவம் பெரிதும் வளர்ந்தது.திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செழித்தது.மாமுனிகளால் உடையவர் காலத்தில் இருந்த மேன்மையை மீண்டும் அடைந்தது வைணவம்!!

18.ராமானுஜர் மனத்திலும், மாமுனிகள் மனத்திலும் இருந்து அருளும் பெருமான்:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அமுதனார், இராமாநுச நூற்றந்தாதியில்
"இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம்,மாலிருஞ்சோலை என்னும்,
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மோடும் வந்து,
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்றவன் வந்து
இருப்பிடம்"என்று பரவாசுதேவரானாலும்,திருவேங்கடவரானாலும்,அழகரானாலும் அவரவர் தம் இருப்பிடங் களுடனே வந்து,ராமானுஜர் மனதில் இருந்து அருள்வார்கள் என்று பாடுகிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணா,ஸ்ரீவேங்கடேச மங்களாசாசனத்தில்,
"ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே!
ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீனிவாஸாய மங்களம்!!"
--(மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக்
கணம் புரந்து,களித்தருளும் வேங்கடவா மங்களங்கள்) என்று பாடுகிறார்.